கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிர் தப்பினர்


கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 25 Nov 2021 10:13 PM GMT (Updated: 26 Nov 2021 5:45 AM GMT)

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிர் தப்பினர்.

சென்னை,

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ரவி (வயது 60). இவர், நேற்று காலை சென்னையில் இருந்து தனது குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம் சத்யவேட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றார். அந்த காரில் 2 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 9 பேர் பயணம் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி, காரை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி, அதன் பேனட்டை திறந்து பார்த்தார். அப்போது என்ஜின் அடியில் லேசாக தீப்பிடித்து எரிவது கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனே காரின் என்ஜினில் தண்ணீரை ஊற்றினார்.

தீப்பிடித்து எரிந்தது

இதற்கிடையில் அந்த காரில் பயணம் செய்த அனைவரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் அந்த கார் மளமளவென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. என்ஜினில் இருந்த ஆயில் மற்றும் எண்ணெய் கசிவுகளால் கார் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த கவரைப்பேட்டை போலீசார், உடனடியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பாதைக்கான போக்குவரத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்தினர்.

சம்பவ இடத்துக்கு வந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர் காரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் சேதமடைந்த காரை கிரேன் மூலம் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த தீ விபத்தால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரில் புகை வந்ததும் ரவி சாலையோரம் காரை நிறுத்தி விட்டு அனைவரும் கீழே இறங்கி விட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றி கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story