போலீசாருக்கான வீடுகளை பெரிதாக கட்டிக்கொடுக்க அரசு உத்தரவு


போலீசாருக்கான வீடுகளை பெரிதாக கட்டிக்கொடுக்க அரசு உத்தரவு
x
தினத்தந்தி 30 Nov 2021 6:47 PM GMT (Updated: 30 Nov 2021 6:47 PM GMT)

காவலர்கள் முதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வரை குடியிருக்கும் போலீஸ் குடியிருப்பு வீடுகளை பெரிதாக கட்டிக்கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போலீசார் நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழகம் முழுவதும் போலீசார் வசிப்பதற்கு குறைந்த வாடகையில் அரசு வீடுகளை கட்டி கொடுக்கிறது. போலீஸ் குடியிருப்புகள் என்று இந்த வீடுகள் அழைக்கப்படுகிறது. இந்த வீடுகளில் காவலர் முதல் டி.எஸ்.பி.க்கள் (துணை போலீஸ் சூப்பிரண்டுகள்) வரை வசிக்கிறார்கள். பதவிக்கேற்ப இந்த வீடுகளின் அளவு இருக்கும். 1990-ம் ஆண்டில் காவலர்களுக்கான வீடுகள் குருவிக்கூடு போல 375 சதுர அடி அளவில்தான் கட்டிக்கொடுக்கப்பட்டது.

பின்பு அது 650 சதுர அடி அளவிலான வீடுகளாக பெரிதாக்கப்பட்டது. தற்போது அதை மேலும் பெரிதாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. காவலர்கள் வீடுகள் மட்டும் அல்லாது, சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள் வசிக்கும் வீடுகளின் அளவையும் பெரிதாக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்த அறிவிப்புக்கிணங்க இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை விவரம் வருமாறு:-

100 சதுர அடி அதிகம்

காவலர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கான குடியிருப்பு வீடுகள் தற்போது 650 சதுர அடி அளவினை கொண்டது. அது 750 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 15.38 சதவீதம் அதிகம். சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான வீடுகள் தற்போது 724 சதுர அடி அளவினை கொண்டது. அது 850 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 17.40 சதவீதம் இது அதிகமாகும்.

இன்ஸ்பெக்டர்கள் வசிக்கும் வீடுகள் 843 சதுர அடியில் இருந்து, 18.62 சதவீதம் அதிகமாக 1,000 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. டி.எஸ்.பி.கள் வசிக்கும் வீடுகள் 1,273 சதுர அடியில் இருந்து, 17.83 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 1500 சதுர அடியாக உயர்த்தப்படுகிறது. இனிமேல் கட்டப்படும் போலீஸ் குடியிருப்பு வீடுகள் இதன் அடிப்படையில் கட்டப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 லட்சம் பேர் பயன்

தமிழக காவல்துறையில் காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையிலான பதவிகளில் சுமார் 1 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அரசு அறிவித்துள்ள இந்த புதிய உத்தரவு நல்ல வரப்பிரசாதமாகும். மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரோடு வாழும் காவலர்களுக்கு இந்த புதிய வீடுகள் வசதியாக இருக்கும் என்றும், இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story