மழை நின்ற பின்பும் சென்னை மாநகரில் வடியாத வெள்ளம் பொதுமக்கள் அவதி


மழை நின்ற பின்பும் சென்னை மாநகரில் வடியாத வெள்ளம் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 1 Dec 2021 10:00 PM GMT (Updated: 1 Dec 2021 10:00 PM GMT)

சென்னையில் மழை நின்ற பிறகும், பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் வடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களின் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் மழை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதை தொடர்ந்து, சென்னையில் நேற்று முன்தினம் முதல் மழை குறைந்து வருகிறது.

சென்னையில், நேற்று வெயில் சுளீரென்று அடித்தது. எனினும், கடந்த பல நாட்களாக பெய்த கனமழை காரணமாக சென்னையில் தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை வெள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர். சென்னை வடபழனி ஆற்காடு சாலை, குமரன் நகர், விருகம்பாக்கம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை நின்ற பிறகும் வெள்ளம் வடிந்த பாடில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

இடுப்பளவு மழைநீர்

இதேபோன்று, கோபாலபுரம், மேற்கு மாம்பலம் பகுதிக்கு உட்பட்ட போஸ்டல் காலனி, மூர்த்தி தெரு, மகாதேவன் தெரு, சுப்பிரமணியன் நகர், எம்.ஜி.ஆர். நகர், நெசப்பாக்கம், கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, கோயம்பேடு நியூ காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்னும் மழை வெள்ளம் தேங்கி நிற்பதை காண முடிகிறது. மேலும், கொளத்தூர் பகுதி, பெரவள்ளூர், திரு.வி.க.நகர் பகுதிகளிலும் பல இடங்களில் இன்னும் மழை வெள்ளம் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது.

இதுதவிர, சூளை பகுதிகளான தட்டான்குளம், கே.எம்.கார்டன், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, அங்காளம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் இன்னும் முழுமையாக மழை வெள்ளம் வெளியேறவில்லை. இதே போன்று, சென்னையை அடுத்த விளாங்காடு பாக்கத்தை ஒட்டி உள்ள நியூ ஸ்டார் சிட்டியில் இன்னும் இடுப்பளவிற்கு மழைநீர் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நோய் பரவும் அபாயம்

மேலும், சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், கழிவுநீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்தால் மட்டும் போதாது, மழை நீரை அகற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story