தமிழகம் முழுவதும் 13-ந்தேதி தொடங்குகிறது: 2 கட்டமாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல்


தமிழகம் முழுவதும் 13-ந்தேதி தொடங்குகிறது: 2 கட்டமாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல்
x
தினத்தந்தி 2 Dec 2021 11:00 PM GMT (Updated: 2 Dec 2021 11:00 PM GMT)

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கிளை, பேரூர், நகர நிர்வாகிகள் தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது.

சென்னை,

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. சட்ட திட்ட விதியின்படி அமைப்பு பொது தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திட வேண்டும். அந்த வகையில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை, நகர, பேரூர், மாநகர மற்றும் வட்ட கழக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2 கட்டங்களாக 13-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

முதல் கட்டமாக 13, 14 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, நெல்லை, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நீலகிரி, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு.

சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், விழுப்புரம், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, காஞ்சீபுரம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு.

2-வது கட்டம்

2-வது கட்டமாக, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, திருவாரூர், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, திருச்சி புறநகர் தெற்கு, திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கடலூர், ராணிப்பேட்டை, சென்னை மாவட்டங்கள்.

மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான மினிட் புத்தகம், விண்ணப்பப்படிவம், ரசீது புத்தகம் வெற்றி படிவம் முதலானவற்றை தேர்தல் நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பாக தலைமை கழகத்தில் இருந்து பெற்று அவற்றை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட செயலாளர்கள் முழுமையாக செய்திட வேண்டும்.

கட்டண விவரம்

மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்தல்களை நடத்தி முடித்து வெற்றி படிவம் ரசீது புத்தகம் மற்றும் விண்ணப்பக்கட்டணம் முதலானவற்றை தேர்தல் முடிந்த 2 நாட்களுக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கிளை செயலாளர் பதவிக்கு போட்டியிட ரூ.250, கிளை அவைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு கட்டணம் இல்லை. பேரூராட்சி வார்டு செயலாளர் பதவிக்கு ரூ.300, வார்டு அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள் பதவிகளுக்கு ரூ.200, நகர வார்டு செயலாளர் பதவிக்கு ரூ.500, நகர அவைத்தலைவர், இணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூ.300, மாநகராட்சி வட்ட செயலாளர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், வட்ட அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள் பதவிக்கு ரூ.700 என விருப்பமனு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story