குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து 26 பேரிடம் விசாரணை


குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து 26 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 10 Dec 2021 11:16 AM GMT (Updated: 10 Dec 2021 11:19 AM GMT)

தமிழக காவல்துறை சார்பில், ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிக்கு உதவிய நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை

இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 ராணுவ அதிகாரிகள் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு கடந்த 8-ந் தேதி வந்தனர். அப்போது நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீ பற்றியது. இந்த விபத்தில் பிபின் ராவத் உள்பட 13 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று தமிழக காவல்துறை சார்பில், மீட்பு பணிக்கு உதவிய நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி காட்டேரி தோட்டக்கலைப் பண்ணை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கி கம்பளிகளை  போர்வை மக்களுக்கு வழங்கினார். அப்போது ஹெலிகாப்டர் விபத்து குறித்து முதல் கட்டமாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த ஜெயசீலன், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை டி.ஜி.பி. பாராட்டினார். அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- 

எம்.ஐ. 17 வி5 வகையை சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி வெலிங்டனுக்கு வந்த போது, நஞ்சப்ப சத்திரத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக முதல்-அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக முதல்-அமைச்சர் என்னை வீட்டுக்கு அழைத்து காவல்துறை, தீயணைப்புத்துறை, தடயவியல் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல வேண்டும். மீட்பு பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று உத்தரவிட்டார். 12.25 மணிக்கு குன்னூர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். 3 பேர் பேசினர். அவர்களை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அதிகமாக தீப்பிடித்து எரியும் சூழ்நிலையிலும் பொதுமக்கள் கம்பளி போன்ற உல்லன் ஆடைகளை மீட்பு பணிக்காக வழங்கி போலீசாருடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 26 சாட்சிகளிடம் விசாரணை நடந்து உள்ளது. நஞ்சப்பசத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களிடம் அதிவிரைவு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் ராணுவத்திடம் பகிர்ந்து கொள்ளப்படும். விபத்து குறித்து வேறு சந்தேகம் இல்லை.

முப்படை தலைமை தளபதி உள்பட உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் வரும்போது வான் மார்க்கம் மட்டுமின்றி நில மார்க்கமும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்வது வழக்கம். இதையொட்டி நீலகிரி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும். வேறு யாரும் வரமுடியாது. காவல்துறை தரப்பில் அனைத்து நிலைகளிலும் தயாராக இருந்தோம். சூலூர் முதல் குன்னூர் வெலிங்டன் வரை சாலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்

ஹெலிகாப்டர் விபத்து குறித்து, இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை தொடர்பாக நீலகிரி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

 08.12.2021 ஆம் தேதி காலை நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சூலூர் விமானப்படை தளத்தில் முப்படை இராணுவ அதிகாரிகளின் இருந்து ஹெலிகாப்டர் விமானம் மூலம் முப்படைகளின் தளபதி திரு. பிபின் ராவத் அவர்கள், அவரது துணைவியார் மற்றும் 12 இதர இராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர்.

இந்த ஹெலிகாப்டர் விமானம் அருகில் குன்னூர் இராணுவப்பயிற்சி கல்லூரி மேல்குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் வான் வெளியில் பறந்துகொண்டு இருந்தபோது திடீரென அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கி தீப்பற்றிக்கொண்டது.

இந்தச்சம்பவம் பற்றி அறிந்த உடனேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி திரு. பிபின் ராவத் அவர்கள், அவரது துணைவியார் மற்றும் 11 இதர இராணுவ அதிகாரிகள் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. விமானத்தின் குரூப் கேப்டன் திரு. வருண்சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்தில்

இந்த விபத்து தொடர்பான புலன் விசாரணை மற்றும் விபத்து நடந்தது குறித்த விரிவான ஆலோசனை கூட்டம் இன்று 09.12.2021 ம் தேதி மாலை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு. C. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்களின் தலைமையில் குன்னூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் இந்த விபத்து வழக்கின் விசாரணை அதிகாரி உட்பட இதர காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தடயவியல் இயக்குனர் அவர்களும் விரிவான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

இது தொடர்பாக மேல்குன்னூர் காவல் நிலைய கு.எண் 129/2021 பிரிவு 174 குவிமுச  (குற்றவியல் விசாரணை முறை சட்டம்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு.முத்து மாணிக்கம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீலகிரி மாவட்டம் அவர்கள் புலன்விசாரணை நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதிகாரியாக

சம்பவ இடத்திறகு முதல் முதலாக சென்று தீக்காயங்களுடன் போராடிய நான்கு அதிகாரிகளை விரைவாக மீட்ட காவலர் சிவா, திரு.முத்து மாணிக்கம் கூடுதல் காவல் கண்காணிப்பாளார், துனைகாவல் கண்காணிப்பாளர் சசிகுமார் ஆய்வாளர் பிரிதிவிராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி ஆகியோரை காவல் துறை தலைமை இயக்குநர் பாராட்டினார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story