கோவில் விழாக்களில் பக்தர்கள் அனுமதி: அமைச்சர் விளக்கம்


கோவில் விழாக்களில் பக்தர்கள் அனுமதி:  அமைச்சர் விளக்கம்
x
தினத்தந்தி 14 Dec 2021 11:18 PM GMT (Updated: 14 Dec 2021 11:18 PM GMT)

கோவில் விழாக்களில் பக்தர்களை அனுமதிப்பது பற்றி முதல்-அமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



திருச்சி,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, நேற்று அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.  அதிகாலை 2.30 மணிக்கு கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட பின் அதன் வழியாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.

இதன்பின் அவர் அளித்த பேட்டியில், வரும் தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் தைப்பூச தேர் திருநாள் முன்னதாக வருவதால், 19 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், இன்று முதல் ஒன்பது நாட்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

கடந்த ஏழு மாதங்களில், அதிகமான அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாலும், முதல்-அமைச்சர் எல்லா சூழ்நிலையையும் சமாளிக்கும் உறுதியுடன், பக்தர்களும், கோவில் பணியாளர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் சொர்க்கவாசல் திறப்புக்கு அனுமதி அளித்துள்ளார். ஏற்கனவே உள்ள நோய் தொற்று மற்றும் புதிய நோய் தொற்று பரவும் வேகத்தை பொறுத்து, மற்ற கோவில் விழாக்களிலும் பக்தர்களை அனுமதிப்பது குறித்து, பக்தர்கள் மகிழ்ச்சியடையும் வகையில், முதல்-அமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என்று கூறியுள்ளார்.


Next Story