நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: புதிய மாநகராட்சி, நகராட்சிகளுக்கு கவுன்சிலர் எண்ணிக்கை நிர்ணயம்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: புதிய மாநகராட்சி, நகராட்சிகளுக்கு கவுன்சிலர் எண்ணிக்கை நிர்ணயம்
x

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், புதிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ண யித்து கடந்த 11.6.1996 அன்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

கடந்த நவம்பர் 1-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை யின்படி, 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், கடந்த 7-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன.

விரிவாக்கம்

நாகர்கோவில் மாநகராட்சியோடு அலூர், தெங்கம்புதூர் ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட சிவகாசி, தாம்பரம் ஆகிய மாநகராட்சி அவசர சட்டப்படி, எந்த காலகட்டத்திலும் அவற்றின் கவுன்சிலர்களின் எண்ணிக்கை 72-ஐ தாண்டக்கூடாது.

இதன் அடிப்படையில், புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், விரிவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் புதிய நகராட்சிகளுக்கு கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்கும்படி தமிழ்நாடு எல்லை வரையறை ஆணையத்தை அரசு கேட்டுக்கொண்டது.

எண்ணிக்கை நிர்ணயம்

அதன் அடிப்படையில் அந்த ஆணையம், புதிதாக உருவக்கப்பட்ட சிவகாசி, தாம்பரம், நாகர்கோவில் ஆகிய 3 மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் ஆகியவற்றில் இடம்பெறும் கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து பரிந்துரையை பட்டியலாக அளித்தது.

அந்த பரிந்துரை பட்டியலை தமிழக அரசு ஏற்று அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் மாநகராட்சிக்கு 52 கவுன்சிலர்கள், சிவகாசிக்கு 48, நாகர்கோவிலுக்கு 52 கவுன்சிலர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகராட்சிகள் எவை?

நகராட்சிகளை பொறுத்தவரை, உளுந்தூர்பேட்டை, திட்டக்குடி, லால்குடி, முசிறி, புகளூர் ஆகிய நகராட்சிகளுக்கு 24 கவுன்சிலர்கள்; சுரண்டை, களக்காடு, திருக்கோவிலூர், மாங்காடு, கோட்டக்குப்பம், சோளிங்கர், பொன்னேரி, திருநின்றவூர், வடலூர், அதிராம்பட்டினம், திருச்செந்தூர், கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, பள்ளப்பட்டி, திருமுருகன்பூண்டி, மானாமதுரை, தாரமங்கலம், இடங்கனாசாலை ஆகிய நகராட்சிகளுக்கு 27 கவுன்சிலர்கள்;

குன்றத்தூர், கூடுவாஞ்சேரி-நந்திவரம் நகராட்சிகளுக்கு 30 கவுன்சிலர்கள், கொல்லங்கோடு நகராட்சிக்கு அதிகபட்சமாக 33 கவுன்சிலர்கள் என எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்து கேட்பு கூட்டம்

புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளின் வார்டு மறுவரையறை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் வருகிற 20-ந் தேதி (நாளை மறுதினம்) முதல் 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது.

தாம்பரம் மாநகராட்சி

23-ந்தேதி (வியாழக்கிழமை) தாம்பரம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கும் கூட்டத்தில், காஞ்சீபுரம் (குன்றத்தூர், மாங்காடு), செங்கல்பட்டு (தாம்பரம் மாநகராட்சி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி), திருவள்ளூர் (பொன்னேரி, திருநின்றவூர் நகராட்சிகள்), ராணிப்பேட்டை (சோளிங்கர் நகராட்சி) மாவட்டங்களின் பொதுமக்கள், கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இவற்றில் கலந்து கொள்ளும் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களின் ஆட்சேபனைகள், கருத்துகளை நேரடியாக தெரிவிக்கலாம். மேலும் இதன் விவரங்களை மனுவாகவும் வழங்கலாம். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய தலைவர் வெ.பழனிகுமார், உறுப்பினர்-செயலர் எ.சுந்தரவல்லி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

Next Story