பெண் ஊழியர்களின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


பெண் ஊழியர்களின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Dec 2021 9:24 AM GMT (Updated: 19 Dec 2021 9:42 AM GMT)

தனியார் விடுதிகளில் தங்கும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு, உணவின் தரம் போன்ற அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் பாக்ஸ்கான் ஆலை தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனியார் விடுதிகளில் தங்கும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு, உணவின் தரம் போன்ற அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து இதுபோன்ற பிரச்சனைகள் வருமுன் தடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம், ஃபாக்ஸ்கான் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களின் நியாயமான கோரிக்கையான,
 
1)மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில், திரும்பிவராத 8 பெண் தொழிலாளர்களின் நிலை என்ன என்பதையும்,

2) தொழிற்சாலையிலும், தங்கும் விடுதிகளிலும் சுகாதாரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல்துறை நடவடிக்கை ஏதுமின்றி விரைவில் விடுவிக்குமாறு இந்த அரசை வற்புறுத்துகிறேன்.

மேலும், இதுபோன்று தமிழகமெங்கும் இயங்கி வரும், தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் தனியார் விடுதிகளில் தங்கும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு, உணவின் தரம் போன்ற அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றினை அமைத்து, அக்குழு அவ்வப்போது நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு இதுபோன்ற பிரச்சனைகளை வருமுன் தடுத்திட வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்' இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


Next Story