34-வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24-ந்தேதி அ.தி.மு.க.வினர் அஞ்சலி


34-வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24-ந்தேதி அ.தி.மு.க.வினர் அஞ்சலி
x
தினத்தந்தி 20 Dec 2021 9:18 PM GMT (Updated: 20 Dec 2021 9:18 PM GMT)

34-வது நினைவு நாளையொட்டி, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் வருகிற 24-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.

சென்னை,

அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர்., நம்மை ஆற்றொணா துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 24-12-1987. எம்.ஜி.ஆரின் 34-வது ஆண்டு நினைவு நாளான வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

அதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆருடைய நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாலை அணிவித்து அஞ்சலி

எம்.ஜி.ஆரின் நினைவு நாளான 24-ந்தேதி அவருடைய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி, வட்ட அளவில், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தங்கள் பகுதிகளில் ஆங்காங்கே எம்.ஜி.ஆருடைய உருவப்படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். கட்சி அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், எம்.ஜி.ஆரின் உருவப்படங்களை வைத்து, மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story