பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட தமிழகத்தில் 33,477 சிறப்பு பஸ்கள்


பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட தமிழகத்தில் 33,477 சிறப்பு பஸ்கள்
x
தினத்தந்தி 20 Dec 2021 11:00 PM GMT (Updated: 20 Dec 2021 11:00 PM GMT)

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வசதியாக 33 ஆயிரத்து 477 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

சென்னை,

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத்துறை மேற்கொள்ளும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முதன்மைச்செயலாளர் கே.கோபால், ஆணையர் எஸ்.நடராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இயக்கப்படும் பஸ்கள்

அதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன், 4 ஆயிரம் சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்து 300 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து இந்த 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16 ஆயிரத்து 768 பஸ்கள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக ஜனவரி 16-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை, தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் 3,797 சிறப்பு பஸ்களும், பிற முக்கிய ஊர்களில் இருந்து 6,612 பஸ்களும் என ஆக மொத்தம் 16 ஆயிரத்து 709 பஸ்கள் இயக்கப்படும். அதன்படி, பொங்கல் பண்டிகைக்காக மொத்தம் 33 ஆயிரத்து 477 பஸ்கள் இயக்கப்படும்.

பஸ் செல்லும் மார்க்கம்

ஜனவரி 11-ந்தேதி முதல் 13-ந்தேதிவரை சென்னையிலிருந்து இயக்கப்படும் பஸ்களின் விவரம்:-

மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு பஸ்கள் செல்லும். கே.கே.நகர் மாநகர போக்குவரத்துக்கழக பஸ் நிலையத்தில் இருந்து இ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழியாக பஸ்கள் செல்லும்.

தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் (மெப்ஸ்) இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சைக்கு பஸ்கள் செல்லும். தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை மற்றும் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு பஸ்கள் செல்லும்.

திருச்சி, மதுரை, நெல்லை

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணிக்கு பஸ்கள் செல்லும்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர, இதர ஊர்களுக்கு அதாவது, மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூருக்கு பஸ்கள் செல்லும்.

முன்பதிவு

முன்பதிவு செய்துள்ள பஸ்கள், கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிச்சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து, ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையம், மெப்ஸ் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும். ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இனணயதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லலாம்.

பொங்கலுக்கு பின்பு...

பொங்கலுக்கு பின்பு 16-ந்தேதி முதல் 18-ந்தேதிவரை 16 ஆயிரத்து 709 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பஸ்கள் குறித்த புகார்

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 18004256151, 044-24749002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முககவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து மேற்கூறப்பட்டுள்ள 4 பஸ் நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story