உல்லாசத்திற்கு அழைத்த முதல் கள்ளக்காதலனை கொலை செய்த பெண்... 2- வது கள்ளக்காதலனுடன் கைது


உல்லாசத்திற்கு அழைத்த முதல் கள்ளக்காதலனை கொலை செய்த பெண்... 2- வது கள்ளக்காதலனுடன் கைது
x
தினத்தந்தி 28 Jan 2022 9:09 AM GMT (Updated: 28 Jan 2022 10:08 AM GMT)

சேத்தியாத்தோப்பு தொழிலாளி மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2-வது கள்ளக்காதலனுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் உல்லாசத்துக்கு அழைத்ததால் கொன்றதாக அந்த பெண், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கடந்த 25-ந் தேதி மேல்வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி வேல்முருகன்(வயது 50) மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக சேத்தியாத்தோப்பு போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடலில் காயங்கள் இருந்ததால், அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதனிடையே பிரேத பரிசோதனையில், கட்டையால் அடித்து வேல்முருகன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கரிவெட்டி கிராமத்தை சேர்ந்த சிவகுமார் மனைவி மகாலட்சுமி(40), அதே கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(34) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது மகாலட்சுமி போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் விவசாய கூலிதொழில் செய்து வருகிறேன். அவ்வாறு வேலைக்கு சென்றபோது மேல்வளையமாதேவியை சேர்ந்த வேல்முருகனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். வீட்டில் குழந்தைகள் மற்றும் கணவர் இல்லாத நேரத்தில் செல்போன் மூலம் வேல்முருகனை தொடர்பு கொண்டு, அவரை வரவழைப்பேன். பின்னர் இருவரும் வீட்டிலேயே உல்லாசம் அனுபவிப்போம். இதனிடையே கரிவெட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடனும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை வேல்முருகன் கண்டித்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு 10 மணி அளவில் வேல்முருகன், மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். அந்த சமயத்தில் எனது கணவரோ, குழந்தைகளோ வீட்டில் இல்லை. நான், ராமச்சந்திரனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தேன்.

இது வேல்முருகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ராமச்சந்திரனுடன் ஏன் பேசுகிறாய் என்று வேல்முருகன் கண்டித்தார். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் வேல்முருகன், தன்னுடன் உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்தார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நான், வீட்டில் இருந்த கட்டையால் வேல்முருகனை சரமாரியாக தாக்கினேன். தலையில் அடிபட்டதும் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த நான், அடுத்து என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்தேன்.

பின்னர் கள்ளக்காதலன் ராமச்சந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தேன். இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினோம். இதற்கிடையில் வெளியில் சென்றிருந்த கணவர் வருவதற்குள் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினேன். பின்னர் இருவரும் சேர்ந்து இரவு 11 மணி அளவில் வேல்முருகனின் உடலை தூக்கிக்கொண்டு, அங்குள்ள பள்ளி வளாகத்தில் போட்டுவிட்டு சென்று விட்டோம். மறுநாள் காலையில் வேல்முருகன் இறந்தது பற்றி அறிந்ததும் கிராம மக்கள் அங்கு கூடினர். அப்போதும் எதுவும் தெரியாததுபோல் இருவரும் இருந்து விட்டோம். ஆனால் போலீசாரின் விசாரணையில் சிக்கிக்கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story