மேகதாது தீர்மானம்: அனைத்து கட்சி ஆதரவுடன் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது


மேகதாது தீர்மானம்: அனைத்து கட்சி ஆதரவுடன் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
x
தினத்தந்தி 22 March 2022 12:02 AM GMT (Updated: 22 March 2022 12:02 AM GMT)

மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக சட்டசபையில் அனைத்து கட்சி ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லை அருகே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

அரசியல் கட்சிகள்

இதற்காக கர்நாடக அரசு நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்து வருகின்றன.

இந்த பிரச்சினை தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது.

அமைச்சர் துரைமுருகன்

பட்ஜெட் தொடர்பான விவாதம் நடந்து வரும் நிலையில், சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

காவிரி விவகாரம்

காவிரி நீர் பிரச்சினை போராட்டம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வடிவம் பெறுகிறது. காவிரியில் வரும் தண்ணீர் தமிழகத்திற்கு உரிமை உண்டு என்ற ஒப்பந்தம் இருந்தாலும், ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று போராட்டத்தை தொடங்கியது கர்நாடக அரசு.

காவிரி நீர் விவகாரத்தில் நமது தலைவர்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ என்பது போல ‘என்று முடியும் இந்த காவிரி விவகாரம்’ என்று எண்ண தோன்றுகிறது.

கொள்ளு பேரன் காலம் வரை...

காவிரி நீர் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் எந்த தீர்ப்புகளையும் மதிக்காமல் கர்நாடக அரசு முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு காலகட்டத்திலும், நாம் போராடிக்கொண்டே வந்துள்ளோம். அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோதும், அதற்காக வாதாடினார்.

முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோதும் காவிரி நீரை பெறுவதற்காக போராடினார். எம்.ஜி.ஆர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவருக்கு பிறகு ஆட்சி பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் காவிரி நீரை பெறுவதற்காக தொடர்ந்து போராடினார்கள்.

இன்றைக்கு மு.க.ஸ்டாலினும், காவிரி நீருக்காக போராட்டத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். அண்ணா காலத்தில் தொடங்கிய இந்த போராட்டம் நமது கொள்ளுப்பேரன் காலம் வரையிலும் போய்விடுமோ என்கிற கவலை எனக்கு உள்ளது.

அங்கே குமாரசாமி, எடியூரப்பா என எல்லோரும் ஒரே அணியில் இருக்கிறார்கள். அது காங்கிரசாக இருந்தாலும் சரி, பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே நிலையில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தமிழக சட்டசபையில் எல்லா கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளோம். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தி.மு.க. ஆதரித்தது.

ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்

தற்போது நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய தருணம் இது. காவிரி பிரச்சினையில் யார் என்ன செய்தார்கள் என்று பேசிக்கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை. நீங்கள் யோக்கியனா, நான் யோக்கியனா என்று பேசுவதை விட்டு விடவேண்டும்.

எனவே இனி வரும் காலங்களில் நாம் காவிரி பிரச்சினையை தீர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

1989-ல் இருந்து இந்த பிரச்சினையை நான் பார்த்து வருகிறேன். தமிழகத்தில் வைகை, தாமிரபரணி என ஆயிரம் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும், தண்ணீருக்காக நாம் கையேந்தும் நிலையிலேயே இருக்கிறோம். மத்தியில் இருந்த எந்த அரசும் எதுவும் செய்யவில்லை.

இந்த காவிரி பிரச்சினையை நமது காலத்திலேயே தீர்த்து வைக்காவிட்டால் பின்னர் வரும் சமுதாயமும் நம்மை காறி துப்பும். மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் இதுவரை காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் மீது அக்கறை கொள்ளாமல், ‘மாற்றான்தாய் மனப்பான்மையுடனேயே’ நடந்து கொண்டுள்ளனர். கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை காவிரி விவகாரத்தில் நியாயமான முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம். அவரது தந்தை சிறந்த ஜனநாயகவாதி. எனவே அந்த அடிப்படையில் அவர் செயல்படுவார் என்று நம்புகிறேன்.

நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்

அண்டை மாநிலத்துடன் ஒரு நல்லுறவை இந்த அரசு பேணும். அதேநேரத்தில், நம் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது. எனவே கனத்த இதயத்துடன் ஒரு தீர்மானத்தை படிக்க போகிறேன். நானா, நீயா என்று பேச கூடாது. நடந்தது, நடந்ததாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். கனத்த இதயத்தோடு இந்த தீர்மானத்தை படிக்கிறேன். இந்த தீர்மானத்தை அனைத்து கட்சியினரும் ஆதரித்து நிறைவேற்றி தர வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து கர்நாடக அரசை கண்டிக்கும் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தீர்மானம்

காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித்தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டு 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியை பெறாமலும், தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் கண்டனத்தை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசை இம்மாமன்றம் வலியுறுத்துகிறது. காவிரி நதிநீர் பிரச்சினை ஒரு நீண்ட கால பிரச்சினையாகும். இதற்கு தீர்வாக சுப்ரீம் கோர்ட்டு 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பு செயலாக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சினை இரு மாநிலங்களின் உணர்வு பூர்வமான பிரச்சினை ஆகும்.

ஆதலால் மேகதாதுவிலோ அல்லது காவிரி படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்கத்திட்டத்தை, மற்றப்படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசை இம்மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.

அனுமதி அளிக்கக்கூடாது

சுப்ரீம் கோர்ட்டின் 18.5.2018 ஆணையின்படி, அதன் 16.2.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பை செயல்படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் குறிப்பிடப்படாத, அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று ஆணையத்தை இம்மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க. ஆதரவு

இந்த தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.), செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), நாகைமாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), சதன் திருமலைகுமார் (ம.தி.மு.க.), அப்துல்சமது (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை), ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) என அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஆதரித்து பேசினார்கள்.

நிறைவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதன் பிறகு தீர்மானம் ஒருமனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Next Story