சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை


சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
x
தினத்தந்தி 29 March 2022 9:57 PM GMT (Updated: 29 March 2022 9:57 PM GMT)

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் மேற்கு வங்க மாநிலத்தில் கைதான முக்கிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனால் அவரை சென்னை அழைத்துவர முடியவில்லை.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பி.எச்.டி. படித்தார். அவர் ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி இருந்தார். இவர் படித்த காலத்தில் பாலியல் ரீதியாக பலரால் துன்புறுத்தப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இவர் மேற்கு வங்க மாநிலம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 2020-ம் ஆண்டு இவர் படிப்பை முடித்துவிட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர் சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.

கோட்டூர்புரம் போலீசார் பாலியல் துன்புறுத்தல், மானபங்கம் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மாணவியிடம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த வாக்குமூலத்தில் 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதன்படி 2 ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்கு போடப்பட்டது.

6 பேரிடம் விசாரணை

குற்றம் சாட்டப்பட்ட 8 பேரில் 2 பேர் வெளிநாடு சென்றுவிட்டதால், மீதி 6 பேருக்கு சம்மன் அனுப்பி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இவர்களில் மாணவியின் வாக்குமூலப்படி முக்கிய முதல் குற்றவாளி மேற்கு வங்க மாநிலம், டைமண்டு ஹார்பர் மாவட்டம், ராய்நகரைச் சேர்ந்த கிங்சூப்தேவ் சர்மா என்பவர் ஆவார். இவரிடமும் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இவர் முன்ஜாமீன் பெற்று விட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கற்பழிப்பு சட்டப்பிரிவை சேர்க்கச்சொல்லியும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் கோரிக்கை எழுந்தது. இதை வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

முக்கிய குற்றவாளி கைது

இதனால் இந்த வழக்கில் கற்பழிப்பு சட்டப்பிரிவும், தீண்டாமை ஒழிப்பு சட்டப்பிரிவும் புதிதாக சேர்க்கப்பட்டது. வழக்கு விசாரணை உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், கோட்டூர்புரம் உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியனின் தலைமையில் மாற்றப்பட்டது.

தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டு, முக்கிய குற்றவாளியான கிங்சூப்தேவ் சர்மாவை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மேற்கு வங்காள மாநிலம் சென்றனர். குற்றவாளி கிங்சூப்தேவ் சர்மா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை மேற்கு வங்க மாநிலம், டைமண்டு ஹார்பர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பிடிவாரண்டு பெற்று சென்னை அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

ஜாமீனில் விடுதலை

ஆனால் ஏற்கனவே அவர் முன்ஜாமீன் பெற்றதை சுட்டிக்காட்டிய கோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்துவிட்டது. சென்னை அழைத்துவர பிடிவாரண்டு கொடுக்க கோர்ட்டு மறுத்து விட்டது. இதனால் தனிப்படை போலீசார் வெறுங்கையோடுதான் சென்னை திரும்பி வரவேண்டியதாகி விட்டது.

இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பேராசிரியர் உள்பட 3 பேரிடம் விசாரணை

ஐ.ஐ.டி.மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் மற்றும் 2 முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர்களிடம் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் நேற்று விசாரணை நடத்தினார். ஏற்கனவே ஒரு முறை இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை அவர்கள் நேரில் ஆஜரானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணை வளையத்தில் சிக்கிய ஐ.ஐ.டி. பேராசிரியர் தற்போதும் பணியில் உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story