கடன் பிரச்சினையில் பள்ளி மாணவன் வெட்டிக்கொலை


கடன் பிரச்சினையில் பள்ளி மாணவன் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 6 April 2022 8:05 PM GMT (Updated: 6 April 2022 8:05 PM GMT)

கடன் பிரச்சினையில் பள்ளி மாணவன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடன் படித்த மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் கிருஷ்ணன் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ராமலிங்கம் வெள்ளையம்மாள் என்பவரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து ராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிளை வெள்ளையம்மாள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இதற்கிடையில், கடந்த 21-ந் தேதி அந்த மோட்டார் சைக்கிளை ராமலிங்கத்தின் மகன் கிருஷ்ணன் கேட்க சென்றுள்ளார். அப்போது, வெள்ளையம்மாளுடன் இருந்த பச்சமுத்து என்பவர் அரிவாளால் கிருஷ்ணணை வெட்டி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவன் கிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பச்சமுத்துவை கைது செய்தனர். ஆனால், வெள்ளையம்மாள் கைது செய்யப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணனுடன் படித்த பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணையும் கைது செய்ய கோரி கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து மறியல் போராட்டம் நீடித்தது.

பெண் கைது

இதற்கிடையே வெள்ளையம்மாள் சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூரில் பதுங்கி இருந்த தகவல் துவரங்குறிச்சி போலீசாருக்கு கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் நேற்று இரவு வெள்ளையம்மாளை கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட வெள்ளையம்மாளை வீடியோ காலில் போலீசார் காட்டியதால் மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனையடுத்து 4 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

Next Story