தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்


தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 6 April 2022 9:17 PM GMT (Updated: 6 April 2022 9:17 PM GMT)

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளின் மீது முக்கிய கவனம் செலுத்தி செயல்பட்டால் தான் அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் பயன் தரும். நடப்பாண்டிற்கான கல்வி ஆண்டில் மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்பக் கல்வி பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வகுப்புகளை தொடங்குவதற்கு முன்பாக உடனடியாக ஆய்வு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

பள்ளிகளில் வகுப்பறை உள்பட எவை பழுதடைந்திருந்தாலும் அவற்றை முறையாக சரிசெய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் தான் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எனவே, அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதையும், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பதையும் அரசு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். இதற்காக தமிழக அரசு, அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி, பராமரித்து, கல்வி தரத்தை உயர்த்தி மாணவர்களின் வருங்கால உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும், நல்வாழ்வுக்கும் உதவிடும் வகையில் முயற்சியில் ஈடுபட்டு தமிழ்நாட்டை வளமான பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story