வடமாநிலங்களில் தொற்று அதிகரிப்பதால் பொதுஇடங்களில் முககவசம் அணியுங்கள் தமிழக அரசு வலியுறுத்தல்


வடமாநிலங்களில் தொற்று அதிகரிப்பதால் பொதுஇடங்களில் முககவசம் அணியுங்கள் தமிழக அரசு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 April 2022 12:25 AM GMT (Updated: 22 April 2022 12:25 AM GMT)

சென்னை ஐ.ஐ.டி.யில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் பொது இடங்களுக்கு செல்பவர்கள் முககவசம் அணிய வேண்டு்ம் என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்த நிலையில், தற்போது சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.

குறிப்பாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மீண்டும் கட்டுப்பாடு

இதன் காரணமாக முடிவுக்கு கொண்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகளை, மீண்டும் அந்தந்த மாநிலங்கள் அமல்படுத்த தொடங்கி உள்ளன. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை 50-க்கும் குறைவாகவே இருந்து வந்தது. தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், அண்டை மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.

கிண்டி ஐ.ஐ.டி.யில்...

இந்தநிலையில், நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் விடுதியில் தங்கி படிக்கும் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இன்னும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். கடந்த 19 மற்றும் 20-ந்தேதிகளில் விடுதியில் தங்கி இருந்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 18 மாணவ-மாணவிகளை பரிசோதனை செய்ததில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஐ.ஐ.டி.க்கு சென்று ஆய்வு செய்தார்.

12 பேருக்கு கொரோனா

அப்போது அவர், கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

வெகு நாட்களுக்கு பிறகு சென்னை கிண்டி ஐ.ஐ.டி.யில் ‘கிளஸ்டர்’ உருவாகி உள்ளது. ஒரே இடத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

365 பேருக்கு பரிசோதனை

கொரோனா உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் லேசான தொற்று தான். எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை.

ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெசன்ட் நகர், கடற்கரை, வேளச்சேரி, தரமணி பகுதிகளில் உள்ளிட்ட உணவகங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

தற்போது வரை 365 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முககவசம் கட்டாயம்

மற்ற மாநிலங்கள் கொரோனா தொற்று குறைந்து வந்ததால், முககவசம் அணிவது கட்டாயம் இல்லை என அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு இருந்த போதிலும், முககவசம் கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை.

ஆனாலும், முககவசம் இனி தேவை இல்லை என பொதுமக்களிடம் தவறுதலான புரிதல் உள்ளது. பொதுமக்கள் கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். தொற்று அதிகரிப்பதால் குறிப்பாக ெபாது இடங்களுக்கு செல்வோர் முககவசம் அணிய வேண்டும்

சோதனை அதிகரிப்பு

தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் அளவில் பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story