கார் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் - மரத்தில் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு...!

திருச்சி அருகே கார் ரேசின் போது ஏற்பட்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்து உள்ளார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த ஜெய்தேவ் (வயது 22), என்பவரும் அவரது நண்பர் வினோமேத்திவ் (வயது 22), என்பவரும் நேற்று நள்ளிரவு தனித்தனி காரில் சமயபுரத்தில் இருந்து லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரம் என்பதால் சாலை போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே காரில் யார் முன்னே செல்வது என போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இரண்டு பேரும் சாலையில் அதிவேகமாக காரை இயக்கினர்.
இதில் இரண்டு கார்களும் சாலையில் சமமாக வந்தபோது திடீரென இரண்டு கார்களும் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டதனால் ஜெய்தேவ் ஓட்டி சென்ற கார் சாலையோரத்தில் இருந்த புலியமரத்தில் வேகமாக மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஜெய்தேவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வினோமேத்திவ் ஓட்டி வந்த கார் எதிரே வந்த சரக்கு வேனின் மீது மோதிவிட்டு சிறிது தூரம் சென்று சாலையோரத்தில் நின்றது. இதில் அவருக்கு பலத்த ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி பலியான ஜெய்தேவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த வினோமேத்திவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story