வேலை பார்க்கும் நிறுவனத்தில் 15 மாத சம்பள பாக்கி: சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்


வேலை பார்க்கும் நிறுவனத்தில் 15 மாத சம்பள பாக்கி: சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்
x
தினத்தந்தி 28 April 2022 9:16 PM GMT (Updated: 28 April 2022 9:16 PM GMT)

சவுதி அரேபியாவில் வேலைபார்க்கும் தமிழர்கள் அங்கு பணிபுரியும் நிறுவனத்தில் 15 மாத சம்பள பாக்கியில் சிக்கி தவிக்கிறார்கள். அரைகுறை உணவே கிடைப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த 2014-ம் ஆண்டு சவுதி அரேபியா ஜெட்டாவில் உள்ள அல் பார்சன் குளோபல் இண்டஸ்டிரியல் காம்பிளக்ஸ் நிறுவனத்துக்கு மெக்கானிக் பிரிவு ஆபரேட்டராக பணிபுரிய சென்றார். இவருக்கு மாத சம்பளமாக 2,500 ரியால் (இந்திய மதிப்பில் ரூ.51 ஆயிரம்) வழங்கப்பட்டது.

இவரைப்போல தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்துக்கு பணியாற்ற சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்கு பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு சவுதி அரேபியாவின் தொழில் பர்மிட் அடையாளமாக ‘இகாமா’ அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது.

15 மாத சம்பள பாக்கி

இந்த நிலையில் கடந்த 15 மாதங்களாக இவர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் சம்பளம் வழங்கப்படவில்லை. அரைகுறை சாப்பாடு மட்டுமே வழங்குவதாக புகார் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து ரமேஷ் தொலைபேசி வழியாக ‘தினத்தந்தி’ நிருபரிடம் கண்ணீர்மல்க கூறியதாவது:-

கடந்த 15 மாதங்களாக எங்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படவே இல்லை. இதுகுறித்து நிறுவனத்திடம் கேட்டால் நிர்வாகம் நஷ்டத்தில் இருப்பதாக கூறி மழுப்புகிறார்கள். மேலும் எங்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. தற்போது இகாமா அடையாள அட்டை காலாவதியாகிவிட்டது. எனவே இந்த அட்டை புதுப்பிக்காமல் நாங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்லமுடியாது.

மன உளைச்சல்

தற்போது எங்களுக்கு நிறுவனத்திடம் இருந்து சாப்பாடு மட்டுமே கிடைக்கிறது. அதுவும் அரைகுறை சாப்பாடே வழங்குகிறார்கள். இதனால் என்ன செய்வது? என்று மன உளைச்சலில் இருக்கிறோம். எங்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சம்பள பாக்கி இருக்கிறது. இவர்கள் போகிற போக்கை பார்த்தால் எங்களை ஏமாற்றி விடுவார்கள் என்று நினைக்கிறோம்.

இதுகுறித்து இங்குள்ள இந்திய தூதரகத்திடம் புகார் அளித்துவிட்டோம். நடவடிக்கை எடுத்தபாடில்லை. தமிழகத்தில் உள்ள எங்கள் உறவினர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்திலும், முதல்-அமைச்சர் தனிப்பிரிவிலும் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே எங்களை காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தான் நாங்கள் நம்பியுள்ளோம். எங்களை மீட்க அவர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story