சிறையில் விசாரணை கைதி மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்


சிறையில் விசாரணை கைதி மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 29 April 2022 9:54 PM GMT (Updated: 29 April 2022 9:54 PM GMT)

சிறையில் விசாரணை கைதி மரணம் அடைந்தது தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டில் விசாரணை கைதி தங்கமணி இறந்துள்ளார். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட, தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர், அவரது வீட்டில் விஷ சாராயம் வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கடந்த 26-ந்தேதி வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் நீதித் துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து, அன்றையதினமே திருவண்ணாமலை கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

நடவடிக்கை

இந்த நிலையில், சிறையிலிருந்த தங்கமணிக்கு 27-ந்தேதி அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு சுமார் 7.40 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8.40 மணியளவில் உயிரிழந்துள்ளார். தங்கமணியின் உடல் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

நீதித் துறையினுடைய நடுவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது. அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், உரிய விசாரணை நடத்தப்பட்டு, இந்த அவைக்குத் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story