கோடைகாலம் முடியும் வரை தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 May 2022 4:59 AM GMT (Updated: 4 May 2022 4:59 AM GMT)

வெயில் காலத்தில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மது அருந்துவதை குறைத்துக்கொள்ளுங்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கோடைக்காலம் என்பதால் கடுமையான வெப்பம் நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) ‘அக்னி நட்சத்திரம்’ என்ற கத்திரி வெயில் தொடங்கி வருகிற 28-ந் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனால், தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, கடந்த (ஏப்ரல்) மாதம் முதல் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது.

முன்னதாக பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, முதல் 7 நாட்களில் மெதுவாக வெப்பத்தின் தாக்கம் ஏறுமுகமாக இருக்கும். அடுத்த 7 தினங்கள் அதிக அளவில் தெரியும். கடைசி 7 தினங்களில் படிப்படியாக குறையும். 

இந்நிலையில் வெயில் காலத்தில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மது அருந்துவதை குறைத்துக்கொள்ளுமாறு என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திபில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கோடைகாலம் முடியும் வரை மக்கள் அனைவரும் தண்ணீர் பாட்டிலை வெளியே எடுத்து செல்வது நல்லது. தாகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கோடை காலத்தில் போதிய அளவு நீர் குடிக்க வேண்டும். 

அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெயிலில் பயணிக்கும்போது தலையில் துண்டு, தொப்பி, துணி உள்ளிட்டவற்றை அணிந்துகொண்டு தலையை மறைத்து செல்வது என்பது நல்லது. கால்களில் செருப்பு இல்லாமல் செல்வதை தவிர்க்கவேண்டும். காற்றோட்ட வீடுகளில் தங்கியிருப்பது அவசியம். 

கோடையில் வெளியே செல்லும் போது முடிந்தவரை, எலுமிச்சை உள்ளிட்ட பல சாறுகளை பகிருங்கள். தேநீர், காப்பி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பாட்டில்களில் அடைத்து வைத்துள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

வெயில் காலத்தில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மது அருந்துவதை குறைத்துக்கொள்ளுங்கள். புரத சத்து அதிக உள்ள உணவுகளை தவிர்த்து பழைய உணவுகளை உட்கொள்ள கூடாது. வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது குழந்தைகளை ஏற்ற கூடாது. கோடை வெப்பத்தில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. எதாவது உடல் பாதிப்பு என்றால் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்” என்று அவர் கூறினார். 

Next Story