நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க! - மாணவர்களுக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 4 May 2022 6:31 AM GMT (Updated: 4 May 2022 6:31 AM GMT)

நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல! என்று முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு 3,119 மையங்களில் நடக்கிறது.  இந்த தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் அடங்குவார்கள்.  அதேபோல், நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோன பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு தொற்று பரவல் குறைந்ததையடுத்து, பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது மாணவ- மாணவிகளுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. 

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,  தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:- நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல!நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க!” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story