குற்றாலத்தில் ரூ.15 கோடியில் நவீன வசதிகள் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு


குற்றாலத்தில் ரூ.15 கோடியில் நவீன வசதிகள் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 May 2022 9:53 PM GMT (Updated: 5 May 2022 9:53 PM GMT)

குற்றாலத்தில் ரூ.15 கோடியில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும், பூண்டி அணைக்கட்டில் படகு சவாரி அமைக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

சென்னை,

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 4 முக்கிய கோவில்களில் முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி - ஒளிக்காட்சி இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து அமைக்கப்படும்.

‘‘தென்னிந்தியாவின் ஸ்பா’’ என்று அழைக்கப்படும் குற்றாலம், நவீன வசதிகளுடன் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தை மேம்படுத்த கன்னியாகுமரியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக ஒரு புதிய படகு இறங்கு தளம் அமைக்கப்படும். கன்னியாகுமரியில் உள்ள முட்டம் கடற்கரை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலாத் தலங்கள் ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்.

பூண்டி அணையில் படகு சவாரி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அலையாத்திக் காடு பகுதியில் படகு சவாரி, நடைபாதைகள், பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

பூண்டி அணைக்கட்டு பகுதியில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி, சாகச விளையாட்டுகள் மற்றும் பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலா தலமாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

நீர் விளையாட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்துக்குடா கடற்கரைப் பகுதியில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி, நடைபாதை, கடற்கரை விளையாட்டுகள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பாளையம் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள், பார்வையாளர் மாடம் மற்றும் பல்வேறு வசதிகள் ரூ.1.50 கோடி திட்ட மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள், பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் மற்றும் இதர வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.1.50 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

சாகச சுற்றுலா

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலைப் பகுதியில் சாகச சுற்றுலா, திறந்தவெளி முகாம்கள், பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் மற்றும் இதர வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

தூத்துக்குடி கடற்கரையில் நீர் விளையாட்டுகள் மற்றும் கடற்கரை விளையாட்டுகள் போன்றவைகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கடற்கரை சுற்றுலாத் தலமாக ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

ரூ.150 கோடியில் அடிப்படை வசதிகள்

சுற்றுலாத் துறை பிற துறைகளுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் புதிய சாலைகள் அமைத்தல், தற்போதுள்ள சாலைகளை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் ரூ.150 கோடியில் மேற்கொள்ளப்படும்.

கிழக்கு கடற்கரை சாலையில் ‘‘ஆன்மிக, கலாசார, சுற்றுச்சூழல் பூங்காவை’’ அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உணவகங்கள் நவீனப்படுத்தப்பட்டு புதிய வணிகச் சின்னத்துடன் சந்தைப்படுத்தப்படும்.

திருப்பதி சுற்றுலா

சென்னை தீவுத் திடலில் உள்ள டிரைவ்-இன் உணவகம் ரூ.50 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். சுற்றுலாப் பயணிகளின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் சுற்றுலா உதவி மையம் மற்றும் கட்டுப்பாடு அறை அமைக்கப்படும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வணிக செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் மின்னணு மேலாண்மை மென்பொருள் ரூ.50 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒருநாள் திருப்பதி சுற்றுலாவுக்கு சீக்கிர தரிசன நுழைவுச் சீட்டுகளை ரூ.150-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தொகுப்பு சுற்றுலா தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து தொடங்கப்படும்.

சென்னை விழா

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் கேரவன் வாகன நிறுத்துமிட பூங்காக்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 2 இடங்களில் அமைக்கப்படும். மாமல்லபுரத்தில் உள்ள மரகதப் பூங்காவில் ஒளிரும் பூங்கா மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்கள் பொது - தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களின் கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் மற்றும் உணவு வகைகளை காட்சிப்படுத்த, ‘‘சென்னை விழா’’ என்ற பெயரில் ஒரு தேசிய கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவு விழா சென்னையில் ரூ.1.50 கோடி செலவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும்.

வீர விளையாட்டு விழா

‘‘வீர விளையாட்டு விழா’’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடி செலவில் நடத்தப்படும்.

சென்னையில் மலர், காய்கனிகள் மற்றும் பனைப் பொருட்கள் கண்காட்சி - கோடை விழா, ரூ.25 லட்சம் செலவில் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து நடத்தப்படும்.

வண்டலூர், கோவளம் மற்றும் ஏற்காடு ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ‘‘குயிக் பைட்ஸ்’’ என்னும் சிறு உணவகம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

எங்கும் ஏறலாம், இறங்கலாம்

சுற்றுலா பயண அமைப்பாளர்கள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்கள் சுற்றுலாத் துறையில் பதிவுகள் மேற்கொள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். சுற்றுலா வழிகாட்டிகள் பதிவு செய்யவும், அவர்களின் திறனை மேம்படுத்தவும் ரூ.50 லட்சம் மதிப்பில் ஒரு புதிய திட்டம் தொடங்கப்படும்.

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் ‘‘எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்’’ என்ற பயணத் திட்டம் தொடங்கப்படும்.

ஆண்டு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொருட்காட்சிகள் நடைபெறும் வண்ணம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சென்னை தீவுத்திடலில் வசதிகள் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story