கோவை, மதுரை, திருச்சி, நெல்லையில் நம்ம ஊர் திருவிழா: சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு


கோவை, மதுரை, திருச்சி, நெல்லையில் நம்ம ஊர் திருவிழா: சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 May 2022 12:21 AM GMT (Updated: 6 May 2022 12:21 AM GMT)

கோவை, மதுரை, திருச்சி, நெல்லையில் நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சென்னை,

பிரமாண்டமான நாட்டுப்புற கலை விழாவான நம்ம ஊர் திருவிழா சென்னையோடு, கோவை, மதுரை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய இடங்களிலும் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும். இந்நிகழ்ச்சிகளில் பங்குபெறும் கலைஞர்கள் மாவட்ட அளவில் விழாக்கள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான இணைய வழி சேவைகளை தொடங்கும். பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் மக்கள் கூடும் பிற இடங்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி, தமிழ்நாட்டின் நாட்டுப்புற மற்றும் செவ்வியல் கலைகள் வளர்க்கப்படும்.

புதிய கட்டிடங்கள்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கம் ரூ.1.43 கோடியில் புனரமைக்கப்படும். கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் உள்ள கட்டிடங்கள் ரூ.1 கோடியில் மேம்படுத்தப்படும்.

சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியின் பாரம்பரிய கட்டிடம் மற்றும் இதர கட்டிடங்கள் ரூ.7.33 கோடியில் புனரமைக்கப்படும். கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் விதிமுறைகளின்படி ரூ.15.68 கோடியில் உரிய வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

இசைப்பள்ளிக்கு புதிய கட்டிடம்

கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகள், இசைப்பள்ளிகள் மற்றும் ஜவகர் சிறுவர் மன்றங்களுக்கு இசைக்கருவிகள், மின்னணு சாதனங்கள், துணை சாதனங்கள், கணினி கூடங்கள், மென்பொருட்கள், ஒலிப்பதிவு கூடங்கள், தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள் ரூ.6 கோடியில் கற்பித்தலின் தரம் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு ரூ.1.60 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும். சென்னை தமிழ்நாடு அரசு இசை கல்லூரியில் உள்ள பாரம்பரிய கட்டிடமான பிராடிகேசில் ரூ.2.80 கோடியில் மீட்டுருவாக்கம் செய்து புனரமைக்கப்படும்.

சிற்ப அருங்காட்சியகம்

மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியின் சிற்ப அருங்காட்சியகம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களின் சிற்பங்களையும், ஓவியங்களையும் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் மையம் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் அலுவலக கட்டிடம், கலைஞர்கள் விடுதி, படங்கள் காட்சிக்கூடம் மற்றும் கலையரங்கம் ஆகியவை ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சென்னையிலும், தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களிலும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நாட்டுப்புறக்கலைகளை காட்சிப்படுத்தும் கலைவிழாவான பொங்கல் விழா நடத்தப்படும். தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் ஆண்டு அரசு நல்கை ரூ.3 கோடியாக உயர்த்தப்படும்.

மீண்டும் கலைநிகழ்ச்சி

சென்னை அரசு அருங்காட்சியக படிமக்கூடங்கள் மிகச்சிறந்த அருங்காட்சியக நடைமுறைகளின்படி நல்ல அனுபவத்தை வழங்கும் வகையில் சிறப்பான காட்சியமைப்புகளுடன் ரூ.7 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

சென்னை அரசு அருங்காட்சியக சின்னமாக திகழ்கிற அருங்காட்சியக கலையரங்கின் குளிர்சாதன கருவிகள், மின்னொளி சாதனங்கள், இருக்கைகள் மற்றும் தீ பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவற்றை மேம்படுத்தி மீண்டும் கலைநிகழ்ச்சிகளை நடத்த திறந்து வைப்பதற்கான பணிகள் ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

புதிய காட்சிக்கூடங்கள்

காஞ்சீபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் சுற்றுலா விளக்க கட்டிடத்தில் மாற்றி அமைக்கப்பட்டு புதிய காட்சி கூடங்களுடன் மேம்படுத்தும் பணிகள் ரூ.2 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

நாகை மாவட்ட அரசு அருங்காட்சியகம் தற்போது செயல்பட்டு வரும் தனியார் கட்டிடத்தில் இருந்து அரசுக்கு சொந்தமான பாரம்பரிய கட்டிடத்தை மீட்டுருவாக்கி அங்கு மாற்றியமைக்கும் பணிகள் ரூ.1.4 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

மீட்டுருவாக்கம்

சென்னை அரசு அருங்காட்சியக வேதியிய பாதுகாப்பு ஆய்வகம் ரூ.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும். சென்னை அரசு அருங்காட்சியக பாரம்பரிய சுற்றுச்சுவரின் உடைந்த பகுதிகளை பழுது பார்த்து மீட்டுருவாக்கம் பணிகள் ரூ.45 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.

சிந்து சமவெளி முத்திரைகளுக்கும், குறியீடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்வதற்கான பானை ஓடுகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள் மற்றும் தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துகளை ஆவணப்படுத்துதல், மின்பதிப்பாக்கம் ஆகிய பணிகள் ரூ.77 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

பட்டயப்படிப்பு அறிமுகம்

தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் என்னும் ஈராண்டு முதுநிலை பட்டியப்படிப்பு ரூ.80 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களை சுற்றுலாத்தலங்களாக மேம்படுத்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

நினைவு சின்னங்களாக அறிவிப்பு

அண்மையில் புயலால் சேதமடைந்த தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டையை ரூ.65 லட்சம் செலவில் மறுசீரமைக்கப்படும். முற்கால பாண்டியர் காலத்து பத்து குடைவரை கோவில்கள் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களாக இந்த ஆண்டு அறிவிக்கப்படும்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் உதிர்ச்சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் போன்ற பல்வேறு தொல்லியல் கலை செல்வங்களை அதே இடத்திலோ அல்லது பாதுகாப்பான பிற இடத்திலோ வைத்து முறையாக பாதுகாக்க மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

ரூ.89 லட்சம் நிதி மானியம்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள சிந்துவெளி ஆய்வு மையத்திற்கு அகழாய்வு மற்றும் பிற திட்டங்கள் மூலம் தொல்லியல் துறையால் உருவாக்கப்பட்ட அறிவுச்செல்வத்தை அடையாளம் காணுதல், இணைத்தல், தொகுத்தல், ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் பரப்புதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.89 லட்சம் நிதி மானியமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story