அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை
x
தினத்தந்தி 6 May 2022 11:56 PM GMT (Updated: 6 May 2022 11:56 PM GMT)

அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. தற்போது இவர் தி.மு.க.வில் இணைந்து, மின்சாரத் துறை அமைச்சராக பதவி வகித்துவருகிறார்.

போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

வழங்க வேண்டும்

இந்த மோசடி மூலமாக நடைபெற்ற சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் ஆவணங்களை தங்களுக்கு வழங்கக்கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, சான்றளிக்கப்பட்ட குறியீடு செய்யப்படாத ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது. அந்த ஆவணங்களின் நகலை வழங்க சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

ஆஜராக வேண்டும்

இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, குறியீடு செய்யப்படாத ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதற்கிடையே சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அதில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சண்முகம் என்பவர் வருகிற 9-ந் தேதியும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் 12-ந் தேதியும், அமைச்சர் செந்தில் பாலாஜி வருகிற 13-ந் தேதியும் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

என்ன வழக்கு?

இந்த சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.ஆனந்தி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘வழக்கில் குறியீடு செய்யப்படாத ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு வழங்க சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்துள்ள நிலையில் எந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறுகிறது என்பது தெரியவில்லை. எனவே, அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரர் தரப்பு வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதுவரையில் எந்தப் பதிலும் இல்லை. எனவே அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

தடை

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘மனுதாரருக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Next Story