விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள் முட்டி 60 பேர் காயம்


விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள் முட்டி 60 பேர் காயம்
x
தினத்தந்தி 8 May 2022 8:08 PM GMT (Updated: 8 May 2022 8:08 PM GMT)

சிவகங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் காளைகள் முட்டி 60 பேர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீகலியுக மெய் அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஊரின் மையப் பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள் பல ஊர்களில் இருந்து வந்து கலந்து கொண்டனர். காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியில் 800 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஒரு சில மாடுகள் பிடிபட்டன. பல காளைகள் பிடிபடாமல் சென்றன. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசுகள், வெள்ளிக்காசுகள், பீரோ, கட்டில், டி.வி., சைக்கிள், பித்தளை அண்டா போன்ற பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

60 பேர் காயம்

இதில் 60 மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

Next Story