சென்னையில் தொழில் அதிபர் மனைவியுடன் படுகொலை: கொள்ளையர்களிடம் இருந்து 1000 பவுன் நகைகள் மீட்பு


சென்னையில் தொழில் அதிபர் மனைவியுடன் படுகொலை: கொள்ளையர்களிடம் இருந்து 1000 பவுன் நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 9 May 2022 12:30 AM GMT (Updated: 9 May 2022 1:04 AM GMT)

சென்னை மயிலாப்பூரில் தொழில் அதிபர், மனைவியுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் தங்க-வைர நகைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டன.

சென்னை,

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த படுகொலை, அதன் பின்னணி பற்றிய விவரம் வருமாறு:-

தொழில் அதிபர்

சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 58), தொழில் அதிபர். குஜராத் மாநிலத்தில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் அனுராதா (55). இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும், சஸ்வத் என்ற மகனும் உள்ளனர். சுனந்தாவுக்கு திருமணம் ஆகி கணவருடன் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசிக்கிறார். மகன் சஸ்வத்துக்கு திருமணம் ஆகவில்லை. அவரும் அமெரிக்காவில் வாழ்கிறார்.

நல்ல இனிய குடும்பம். வசதிக்கும், வாழ்வுக்கும் பஞ்சமில்லை. மகள் சுனந்தா முதல் குழந்தைக்கு தாயானார்.

பேரக்குழந்தையை பார்ப்பதற்காக ஸ்ரீகாந்த், மனைவி அனுராதாவுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கா சென்றார். இடையில் ஒரு முறை ஸ்ரீகாந்த் மட்டும் சென்னைக்கு வந்தார். மீண்டும் அவர் அமெரிக்கா சென்றார். அவரது வீட்டை கார் டிரைவர் கிருஷ்ணா (45) என்பவர் பார்த்துக்கொண்டார். வீட்டில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அவர் தங்கி இருந்தார்.

படுகொலை-கொள்ளை

நேற்று முன்தினம் அதிகாலையில் ஸ்ரீகாந்த், மனைவி அனுராதாவுடன் சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து டிரைவர் கிருஷ்ணா ஸ்ரீகாந்தையும், அவரது மனைவி அனுராதாவையும் காரில் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

வீட்டுக்கு சந்தோஷமாக வந்த ஸ்ரீகாந்தும், அனுராதாவும் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் மாமல்ல புரத்தை அடுத்துள்ள நெமிலிச்சேரி பண்ணை வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டது. வீட்டில் இருந்த தங்க-வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த படுபாதக செயலை செய்தது கார் டிரைவர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவிராயும் ஆவார்கள். கொலையை செய்து விட்டு தங்க, வைர நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு காரில் தப்பிச்செல்லும் போது, ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கைதான கிருஷ்ணாவும், ரவிராயும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கொள்ளை அடித்துச்சென்ற தங்க, வைர நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டது.

கூடுதல் கமிஷனர் பேட்டி

சென்னையை அதிரவைத்த இந்த இரட்டை கொலை, கொள்ளை சம்பவம் பற்றி தென் சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் டாக்டர் கண்ணன் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விளக்கி கூறினார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

கொலை செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்தும், அவரது மனைவியும் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். அவர்களை கார் டிரைவர் கிருஷ்ணா இன்னோவா காரில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். விமான நிலையம் வந்தவுடன், ஸ்ரீகாந்தின் மகன் அமெரிக்காவில் இருந்து செல்போனில் பேசி இருக்கிறார். அப்போது ஸ்ரீகாந்த், டிரைவர் கிருஷ்ணா காரில் எங்களை வீட்டுக்கு அழைத்து செல்கிறார் என்றும், வீட்டுக்கு போனதும் மீண்டும் பேசுகிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

மீண்டும் காலை 8.30 மணி அளவில் அமெரிக்காவில் இருந்து ஸ்ரீகாந்திடம், அவரது மகன் சஸ்வத் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் ஸ்ரீகாந்தின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. உடனே டிரைவர் கிருஷ்ணாவுக்கு சஸ்வத் செல்போனில் பேசி உள்ளார். நான் காய்கறி வாங்க கடைக்கு வந்துள்ளேன். அய்யாவும், அம்மாவும் தூங்குகிறார்கள். தூங்கி விழித்தவுடன் பேசச்சொல்கிறேன் என்று கிருஷ்ணா தெரிவித்துள்ளார். அடுத்து காலை 10.30 மணிக்கு மீண்டும் சஸ்வத் அமெரிக்காவில் இருந்து தந்தை ஸ்ரீகாந்துடன் பேச முற்பட்டார். அப்போதும் செல்போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. இது பற்றி மீண்டும் டிரைவர் கிருஷ்ணாவிடம் சஸ்வத் செல்போனில் பேசி கேட்டார். அப்போது கிருஷ்ணா முரணாக பேசினார். பின்னர் போனை அவர் சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

உறவினர் மூலம்...

இதனால் சந்தேகம் கொண்ட சஸ்வத் அடையாறு இந்திரா நகரில் வசிக்கும் தனது உறவினரிடம் பேசி வீட்டுக்கு நேரில் போய் பார்க்கச்சொல்லி இருக்கிறார். உறவினர் ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு வெளிப்பக்கம் பூட்டி இருந்தது. டிரைவர் கிருஷ்ணாவை காணவில்லை. வீட்டில் இருந்த காரையும் காணவில்லை.

உடனே உறவினர் வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஸ்ரீகாந்தும், அவரது மனைவியும் இல்லை. வீட்டில் உள்ள கீழ்தளமும், மேல் தளமும் டெட்டால் கலந்த தண்ணீரால் சுத்தமாக கழுவப்பட்டு இருந்தது. வீட்டின் சுவர்களில் ரத்தக்கறை காணப்பட்டது. வீட்டில் உள்ள பீரோ ஒன்று உடைக்கப்பட்டு இருந்தது. லாக்கர்கள் திறந்து கிடந்தது.

ஏதோ விபரீதம் நடந்து விட்டது என்பதை உணர்ந்த ஸ்ரீகாந்தின் உறவினர் போலீசுக்கு தகவல் சொன்னார். எங்களுக்கு பிற்பகல் 1 மணி அளவில் ஸ்ரீகாந்தும், அவரது மனைவியும் காரில் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர் என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

தனிப்படை மூலம் தேடுதல் வேட்டை

உடனடியாக கமிஷனர்சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் பல தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினோம். வீட்டில் ரத்தகறை காணப்பட்டதாலும், நகைகள் காணாமல் போனதாலும், டிரைவர் காணாமல் போனதாலும், காரும் காணாமல் போனதாலும், பல வித சந்தேகங்கள் எழுந்தது. ஸ்ரீகாந்தையும், அவரது மனைவியையும் கடத்திச்சென்று எங்கோ வைத்து, டிரைவர் கிருஷ்ணா சித்ரவதை செய்யலாம் என்று நினைத்தோம். நெமிலிச்சேரி பண்ணை வீட்டிற்கு தனி போலீஸ் படை ஒன்றை அனுப்பி வைத்தோம்.

அங்கு புதிதாக குழி தோண்டி மண்ணால் மூடப்பட்ட தடயம் இருந்தது. மேலும் அதன் அருகே செல்போன் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதன் அருகில் கையில் அணியும் உறை ஒன்றும் காணப்பட்டது. இதை வைத்து ஸ்ரீகாந்தும், அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டு, உடல்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று உறுதியானது.

ஸ்ரீகாந்தின் இன்னோவா காரில் கொலையாளி கிருஷ்ணா தப்பிச்சென்றிருக்க வேண்டும் என்று கருதினோம். காரின் நம்பரை வைத்து பல இடங்களில் உள்ள செக்போஸ்ட்டுகளிலும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தோம.

உயர் போலீஸ் அதிகாரிகள் குழு

குறிப்பிட்ட இன்னோவா கார் காலை 10.30 மணிக்கு உத்தண்டி செக்போஸ்டை கடந்து சென்றுள்ளது. பின்னர் அந்த கார், சூளைமேடு வந்து பாடி வழியாக மெயின் ரோட்டில் சென்றுள்ளது. பகல் 12.30 மணி அளவில் அந்த கார் கும்மிடிப்பூண்டி சென்று அங்கிருந்து ஆந்திர எல்லைக்குள் போய் விட்டது. ஆந்திர போலீசாரை உஷார் படுத்தினோம். கொலையாளி கிருஷ்ணா நேபாளத்தை சேர்ந்தவர். எனவே அவர் நேபாளம் தப்பிச்செல்ல திட்டமிட்டிருக்கலாம் என்று கருதி நேபாள எல்லை வரை உள்ள அனைத்து மாநில போலீசும் உஷார்படுத்தபட்டனர். அந்த பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களும் கண்காணிக்கப்பட்டது.

கொலையாளி சென்ற கார் ஆந்திர மாநிலம் ஓங்கோலை நோக்கி போய்க்கொண்டிருந்ததை கண்டறிந்தோம். இதனால் ஓங்கோல் போலீசை உஷார்படுத்தி, குறிப்பிட்ட நம்பர் கொண்ட இன்னோவா கார் வந்தால் மடக்கி பிடிக்கும்படி கேட்டுக்கொண்டோம். ஒருவேளை இதில் பிடிக்க முடியாவிட்டால் நேபாளத்துக்கு விமானத்தில் சென்று நேபாள-இந்திய எல்லையில் மடக்கி பிடிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் குழு ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டது.

மடக்கி பிடித்த ஆந்திர போலீஸ்

கொலையாளி சென்ற பாதையில் உதவி கமிஷனர் குமரகுருபரன் தலைமையில் ஒரு தனிப்படை போலீசும் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த படையும் பின் தொடர்ந்து சென்றது. மாலை 5.30 மணி அளவில் ஓங்கோலில் வைத்து ஆந்திர மாநில போலீசார் கொலையாளி சென்ற காரை மடக்கிப்பிடித்தனர்.

பின்தொடர்ந்து சென்ற உதவி கமிஷனர் குமரகுருபரன் தலைமையிலான தனிப்படை போலீசாரிடம், கொலையாளி கிருஷ்ணாவும், கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது நண்பர் ரவிராயும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை அடித்து சென்ற நகைகளும், காரும் பத்திரமாக மீட்கப்பட்டது.

நகைகளை எடை போட்டோம்

ஆந்திர மாநில போலீசார் முன்னிலையில் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி நகைகள் எடை மெஷின் மூலம் எடை போட்டு பார்க்கப்பட்டது. அதை வீடியோ எடுத்தோம். எடை போட்டதில் 9.8 கிலோ (சுமார் ஆயிரம் பவுன்) தங்க நகைகளும், 70 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களும் இருந்தன. அதன்பிறகு குற்றவாளிகள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். மீட்கப்பட்ட நகைகளும், காரும் சென்னை கொண்டுவரப்பட்டது.

நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி கொலையாளிகள் சென்ற இடத்தை கண்டுபிடித்து, அவர்களை கைது செய்தோம். சுமார் 5 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். இந்த 5 மணி நேரமும் ஒரு திகில் சம்பவமாக எங்களுக்கு திக்... திக்.. என்று காணப்பட்டது. கொலையாளிகள் நேபாளம் தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளனர். நேபாளம் சென்று விட்டால் அவர்களை பிடிப்பது கடினம். எனவே அவர்களை ஆந்திர எல்லைக்குள்ளேயே மடக்கிப்பிடிக்க திட்டமிட்டு செயல்பட்டு அதில் வெற்றி பெற்றோம்.

கழுத்தை அறுத்து...

ஸ்ரீகாந்த் பெரிய அளவில் வீட்டில் பணம் வைத்திருப்பார். அதை கொள்ளை அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு கார் டிரைவர் கிருஷ்ணா செயல்பட்டுள்ளார். பணம் வைத்திருக்கும் இடம் ஸ்ரீகாந்திற்கு தெரியும் என்பதால், அவர் அமெரிக்காவில் இருந்து வந்ததும் அவரையும், அவரது மனைவியையும் கொலை செய்து விட்டு பணத்தை கொள்ளை அடித்து தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளார். தனது திட்டத்திற்கு உதவியாக செயல்பட மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த தனது நண்பர் ரவிராயை தன்னுடன், கிருஷ்ணா வைத்துக்கொண்டார். ரவிராயும் சென்னையில் கார் டிரைவராக தொழில் செய்து வந்தார்.

கொலை செய்தவுடன் ஸ்ரீகாந்த் உடலையும், அவரது மனைவி உடலையும் பண்ணை வீட்டில் புதைக்க அங்கு ரெடியாக ஏற்கனவே குழி தோண்டி வைத்துள்ளனர். திட்டப்படி ஸ்ரீகாந்தும், அவரது மனைவியும் வீட்டிற்கு வந்தவுடன் பணம் இருக்கும் இடத்தை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். வீட்டில் உள்ள லாக்கர் சாவியையும் அவர்களிடம் இருந்து வாங்கி உள்ளனர். அதன்பிறகு வீட்டின் கீழ் தளத்தில் வைத்து ஸ்ரீகாந்தையும், மேல் தளத்தில் வைத்து அவரது மனைவி அனுராதாவையும் கொலை செய்துள்ளனர். மண் வெட்டி கட்டையால் தலையில் தாக்கியும், கத்தியால் இருவரது கழுத்தை ஆட்டை அறுப்பது போல அறுத்தும் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்து இருக்கிறார்கள்.

போர்வையால் உடல்களை கட்டி

அதிகாலை 5 மணி அளவில் கொலை நடந்துள்ளது. கொலை நடந்தவுடன் லாக்கர்களை சாவி மூலம் திறந்துள்ளனர். அதற்குள் டிரைவர் கிருஷ்ணா எதிர்பார்த்தபடி கோடிக்கணக்கான பணம் இல்லை. ஆனால் அதை விட ஆச்சரியப்படும் வகையில் தங்க சுரங்கம்போல தங்க-வைர நகைகள் நினைத்து பார்க்க முடியாத வகையில் ஜொலித்தன. 3 பெரிய ராட்சத பெட்டிகளிலும், சிறிய 9 பெட்டிகளிலும் தங்க-வைர நகைகளையும் அள்ளிப்போட்டு, கார் டிக்கியில் ஏற்றி உள்ளனர். ஸ்ரீகாந்த் உடலையும், அவரது மனைவி உடலையும் போர்வைகளில் சுற்றி உள்ளனர். வீட்டில் உள்ள ரத்தக்கறைகளை டெட்டால் கலந்த தண்ணீர் மூலம் கழுவி விட்டுள்ளனர். அதன் பிறகு வீட்டில் இருந்து காரில் கிளம்பி உள்ளனர். கொலை செய்யப்பட்ட உடல்களை காரின் பின் சீட்டில் போட்டுள்ளனர்.

கொலையாளி கிருஷ்ணாவின் தந்தை லால்சர்மா, தொழில் அதிபர் ஸ்ரீகாந்திடம் கடந்த 20 வருடங்களாக வேலை செய்து வந்துள்ளார். அவரது குடும்பம் சென்னையில்தான் வசித்தது. கடந்த சில வருடங்களாக தனது பண்ணை வீட்டில் காவலாளியாக லால்சர்மாவை ஸ்ரீகாந்த் குடிவைத்துள்ளார். அந்த வகையில் கொலையாளி கிருஷ்ணாவும், ஸ்ரீகாந்த் குடும்பத்திடம் நெருக்கமாக பழகி உள்ளார். அவரிடம் நம்பிக்கையான கார் டிரைவராக இருந்துள்ளார். அமெரிக்காவிற்கு சென்றபோது கூட கிருஷ்ணாவை நம்பி வீட்டை ஒப்படைத்து சென்றுள்ளனர். பண ஆசையால், இந்த கொடூரமான கொலைகள் நடந்துள்ளது. இது போல நம்பிக்கைக்கு பாத்திரமான டிரைவரே கொலையாளியாக மாறும்போது, போலீஸ் என்ன செய்ய முடியும். பொதுவாக யாராக இருந்தாலும், வெளி ஆட்களை நம்பக்கூடாது என்பது இந்த படுகொலை சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

தடயங்கள் சிக்கியது

கொலையாளிகள் பற்றி நிறைய தடயங்கள் சிக்கி உள்ளது. கொலை சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அவற்றை கைப்பற்றி உள்ளோம். கொலை செய்ய பயன்படுத்திய கட்டை, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றை வைத்து கொலையாளிகள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கோர்ட்டில் அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உடல்கள் தோண்டி எடுப்பு

கொலையாளிகள் கொடுத்த தகவல் அடிப்படையில் பண்ணை வீட்டில் புதைக்கப்பட்டு இருந்த தொழில் அதிபர் மற்றும் அவரது மனைவி உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) பிரேத பரிசோதனை நடக்கிறது.

Next Story