காண்டிராக்டரிடம் ரூ.3½ லட்சம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அதிரடி கைது


காண்டிராக்டரிடம் ரூ.3½ லட்சம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அதிரடி கைது
x
தினத்தந்தி 9 May 2022 8:02 PM GMT (Updated: 9 May 2022 8:02 PM GMT)

காண்டிராக்டரிடம் ரூ.3½ லட்சம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் மாவட்டம் வீரகனூர் ஊராட்சியில் தெடாவூர் கிராமத்தில் இருந்து தம்மம்பட்டி வரை தார்ச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.6 கோடியே 93 லட்சம் டெண்டர் கோரப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக வீரகனூர் நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் சுந்தர்ராஜன் (வயது 60) என்பவர், ஆத்தூரில் உள்ள உதவி கோட்ட என்ஜினீயர் சந்திரசேகரன் (54) என்பவரை அணுகினார். அப்போது அந்த சாலை பணியை அவருக்கு ஒதுக்க, 12 சதவீதம் கமிஷன் தொகை அதாவது ரூ.78 லட்சம் தர வேண்டும் என்று சந்திரசேகரன் கேட்டதாக தெரிகிறது.

முதலில் ரூ.3½ லட்சம்

கமிஷன் தொகை ரூ.78 லட்சத்தில் முதலில் ரூ.3½ லட்சம் தருவதாகவும், பணிகளை ஒதுக்கி தந்த பிறகு, சாலை பணியை முடித்து விட்டு மீதி பணத்தை தருவதாகவும் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். பின்னர் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாமல் அவர்சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் முறையிட்டார். இதையடுத்து அவர்கள், சந்திரசேகரனை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

அதிரடியாக சிக்கினார்

அதன்படி அவர்கள் சுந்தர்ராஜனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அதனை வாங்கிக்கொண்ட சுந்தர்ராஜன், ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலகத்துக்கு சென்று சந்திரசேகரனை சந்தித்து ரூ.3½ லட்சத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அலுவலகத்துக்குள் நுழைந்து சந்திரசேகரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ரூ.81 ஆயிரம் பறிமுதல்

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் சேலம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு என்ஜினீயர் சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சேலம் ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு என்ஜினீயர் அலுவலகத்துக்கு போலீசார் சென்றனர். அப்போது, அங்கிருந்த அதிகாரி ஒருவர் ரூ.81 ஆயிரத்தை ஜன்னல் வழியாக வெளியே வீசினார். அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாகவும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Next Story