55 சுங்கச்சாவடிகளில் தானியங்கி நம்பர் பிளேட் கேமராக்கள் நிறுவப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு


55 சுங்கச்சாவடிகளில் தானியங்கி நம்பர் பிளேட் கேமராக்கள் நிறுவப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 May 2022 9:41 PM GMT (Updated: 10 May 2022 9:41 PM GMT)

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 55 சுங்கச்சாவடிகளில் தானியங்கி நம்பர் பிளேட் கேமராக்கள் நிறுவப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை கண்காணிப்பதும், மாநிலம் முழுவதும் உள்ள 55 சுங்கச்சாவடிகள் மற்றும் அண்டை மாநில எல்லையில் அமைந்துள்ள 50 வாகன சோதனைச்சாவடிகளுடன் இணைந்து தானியங்கி நம்பர் பிளேட் கேமராக்களை நிறுவுவதன் மூலம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வெளிமாநில குற்றவாளிகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் போன்றவர்களின் நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டுவர உதவிடும் வகையில் தேசிய அளவில் ஒரு முன்னோடி திட்டமாக ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் ரூ.9 கோடி செலவில் அமைக்கப்படும்.

ஒவ்வொரு மண்டலத்திற்கும் நடமாடும் ஆளில்லா விமான அலகு காவல் படைப்பிரிவு ரூ.1.20 கோடி செலவில் விரிவுபடுத்தப்படும். சென்னை பெருநகர காவலில் 3 வழி தடங்களில் போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு மண்டலம் ரூ.10.50 கோடி செலவில் நிறுவப்படும். போதைப்பொருள் தடுப்பு, சைபர் கிரைம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் சாலை விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென தொடர் செலவினமாக ரூ.2 கோடி வழங்கப்படும்.

‘பறவை’ முன்னோடி திட்டம்

இளம் மற்றும் முதல் முறை குற்றவாளிகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் “பறவை” என்னும் முன்னோடி திட்டம் ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இணையவழி குற்றங்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க “இணைய எச்சரிக்கை செயலி” மற்றும் “இணைய பாதுகாப்பு முகப்பு” ரூ.30 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க “பருந்து” என்ற செயலி ரூ.33 லட்சம் செலவில் உருவாக்கப்படும். காணாமல் போன மற்றும் திருட்டு வாகனங்களை கண்டறியும் “ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு” செயலி ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்படும்.

இடமாற்றம்

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுடன் இணைத்து “போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவாக” மறுசீரமைக்கப்படும். சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி கல்லூரி வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் செயல்பட்டுவரும் உயர் காவல் பயிற்சியக வளாகத்திற்கு மாற்றப்படும்.

சிறப்பு புலனாய்வுக்கு உதவும் நிபுணர்களை பணியமர்த்துவதற்கான விசாரணை கட்டணங்கள் தொடர்பாக அதிகாரிகளின் அனுமதி அதிகாரம் உயர்த்தப்படும். குற்ற வழக்குகள், மதுவிலக்கு வழக்குகள் மற்றும் உணவுப்பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விடுதல் முறை எளிமைப்படுத்தப்படும்.

இடர்படி தொகை உயர்வு

காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலானவர்களுக்கு இடர்படியினை ரூ.800-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு ரூ.900-ல் இருந்து ரூ.1,000 ஆகவும் உயர்த்தி கடந்த நிதியாண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது காவல் துறையில் உள்ள தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் அனைத்து ஆளினர்களுக்கும் வழங்கப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூ.63 லட்சம் ஆகும்.

திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு ஆளிநர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு ஊதியம் வழங்கப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூ.1.16 கோடியாகும். காவல் ஆளினர்களுக்கு ஏற்படும் நிரந்தர முழு உடல் ஊனத்திற்கு வருடாந்திரம் வழங்கப்படும் மொத்த காப்பீட்டு தொகையான ரூ.30 லட்சம் ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும்.

முதல்-அமைச்சர் பதக்கம்

மாநிலத்தில் போதைப்பொருள் தடுப்பிற்கென முதல்-அமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும். காவலர்களுக்கான “மகிழ்ச்சி” என்ற நலச் செயல் திட்டம் ரூ.53 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

சென்னை பெருநகரில் பணிபுரியும் காவலர்களின் உடல்நலன், மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படும். இதற்கான செலவினம் ரூ.46 லட்சம் ஆகும். பெண் காவலர்களுக்கான பணி - வாழ்க்கை சமநிலை குறித்த பயிற்சியினை “ஆனந்தம்” என்கிற திட்டத்தின் மூலம் ரூ.34 லட்சம் செலவில் வழங்கப்படும்.

விளையாட்டு உபகரணங்கள்

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வசதிகள் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும். காவல் புகைப்பட கலைஞர் பிரிவு மறுசீரமைக்கப்படும். தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை பணியாளர்களுக்கு காவல் துறை மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

கழிவு செய்யப்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்களுக்கான 200 ஜீப்புகளுக்கு பதிலாக புதிதாக 200 ஜீப்புகள் ரூ.20 கோடி செலவில் வழங்கப்படும். மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள காவல் நிலையங்களுக்கான 20 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் ரூ.2 கோடி தொடரா செலவினத்தில் வழங்கப்படும்.

200 இருசக்கர வாகனம்

தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளில் உள்ள 278 காவல் நிலையங்களுக்கும் தலா ஒரு இருசக்கர ரோந்து வாகனம் ரூ.3 கோடி செலவில் வழங்கப்படும். கடலோர ரோந்து பணிக்காக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு வழங்கப்பட்ட எந்திர மற்றும் விரைவு இடைமறிப்பு படகுகள் பராமரிக்கப்படும். இதற்கு தொடர் செலவினமாக ரூ.5 கோடி செலவிடப்படும்.

நுண்ணறிவு பிரிவின் நான்கு அலகுகளில் களப்பணியாற்றும் காவலர்களுக்கு 200 இரு சக்கர வாகனங்கள் ரூ.3.92 கோடி செலவில் வழங்கப்படும். முதல்-அமைச்சரின் தனி பாதுகாப்பு பிரிவிற்கு உடனடியாக ஜாமர் கருவி பொருத்தப்பட்ட 2 வாகனங்கள் ரூ.4.48 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.

65 ஆயிரம் சி.சி.டி.வி. கேமரா பராமரிப்பு

சென்னை பெருநகர காவலின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நிறுவப்பட்டுள்ள 65 ஆயிரம் சி.சி.டி.வி. கேமராக்களை பராமரிக்க ரூ.2.50 கோடி வழங்கப்படும். சென்னை பெருநகர காவல் போக்குவரத்து பிரிவிற்கு 6 நான்கு சக்கர மற்றும் 6 இரண்டு சக்கர இழுவை வாகனங்கள் ரூ.2 கோடி செலவில் வாங்கப்படும்.

10 ஆண்டுகளுக்கு மேலான 68 போக்குவரத்து சமிக்ஞை கம்பங்களை மாற்றுதல் மற்றும் 244 போக்குவரத்து சமிக்ஞை கம்பங்கள் பராமரிக்கும் பணி ரூ.9 கோடியில் மேற்கொள்ளப்படும். 312 சாலை சந்திப்புகளில் தொலைதூர போக்குவரத்து சமிக்ஞை கட்டுப்பாட்டு கம்பங்கள் ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்படும்.

ரோந்து பணி

சென்னை பெருநகர காவலில் கடற்கரை ரோந்து பணிக்கு கடற்கரை ரோந்து வாகனங்கள் ரூ.80 லட்சம் செலவில் வாங்கப்படும். மாநில காவல் தலைமையகத்தில், சமூக ஊடக மையம் ஒன்று ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும். செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களிலும், திருப்பூர் மாநகரிலும், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளிலும் புதிதாக தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலகுகள் ரூ.8 கோடி தொடர் செலவினத்தில் உருவாக்கப்படும்.

சென்னை காவல் ஆணையரகத்தில் 2 காவல் துணை ஆணையர் பதவிகளும் மற்றும் 2 காவல் உதவி ஆணையர் பதவிகளும் ரூ.2.25 கோடி செலவில் உருவாக்கப்படும். சேலம், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் திருச்சி மாநகரங்களில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) பதவி ரூ.1.76 கோடி செலவில் உருவாக்கப்படும்.

சிலை திருட்டு தடுப்பு பிரிவில் ஒரு காப்பாளர் பதவி ரூ.6 லட்சம் தொடர் செலவினத்தில் உருவாக்கப்படும். மாநிலத்தில் உள்ள 11 காவல் சரகங்களிலும் தலா ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் பதவி ரூ.3.70 கோடி செலவில் உருவாக்கப்படும்.

கீழ்ப்பாக்கம் துணை காவல் ஆணையருக்காக புதிய அலுவலக கட்டிடம் ரூ.3.16 கோடி மதிப்பில் கட்டப்படும். காவலர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் கணினிசார் குற்றத்தடுப்பு பிரிவு தலைமையிட கட்டிடம் ரூ.20 கோடியில் கட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story