வாட்டி வதைத்த வெயிலுக்கு மத்தியில் சென்னையை குளிர்வித்த மழை


வாட்டி வதைத்த வெயிலுக்கு மத்தியில் சென்னையை குளிர்வித்த மழை
x
தினத்தந்தி 11 May 2022 12:01 AM GMT (Updated: 11 May 2022 12:01 AM GMT)

வாட்டி வதைத்து வந்த வெயிலுக்கு மத்தியில் நேற்று பெய்த மழையால் சென்னை சற்று குளிர்ந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையிலும், ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலனம், வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் வாட்டி வதைக்கும் வெயிலிடம் இருந்து அவ்வப்போது பெய்யும் மழையால் சற்று ஓய்வு கிடைத்தது.

இருப்பினும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், இந்த கோடை மழை எதுவும் இல்லாமல், சுட்டெரிக்கும் வெயிலினால் சென்னை வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி இருந்தனர். லேசான மழை பெய்தால் கூட வெப்பம் தணிந்து காணப்படுமே? என்று ஏக்கத்தோடு காத்திருந்த மக்களுக்கு வரப்பிரசாதமாக அசானி புயல் வந்தது. இதனால் நேற்று முன்தினம் மழை பெய்யாவிட்டாலும், கருமேகக்கூட்டங்களினால் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருந்தது.

லேசான மழை

இந்த நிலையில் அசானி புயல் தீவிரம் அடைந்து, அதன் முனைப்பகுதி தமிழக பகுதிகள் வரை இருந்த காரணத்தினால் தமிழகத்தில் நேற்று பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் காலையில் லேசானது முதல் மிதமான மழை பதிவானது.

இந்த திடீர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் ஓரிரு இடங்களில் தண்ணீர் தேங்கியதையும் பார்க்க முடிந்தது. தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. இதனால் அலுவலகம் சென்றவர்களும், தேர்வுக்காக புறப்பட்டு வந்த மாணவ-மாணவிகளும் கடும் தவிப்புக்குள்ளாகினர்.

சென்னை குளிர்ந்தது

இந்த மழை காரணமாகவும், நேற்று முன்தினம் திரள் கருமேகக்கூட்டங்கள் நிலவியதாலும் நேற்று சென்னை சற்று குளிர்ந்தது. வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது. சென்னையில் அலுவலகம், வீடுகள் உள்பட பல இடங்களில் ஏ.சி.க்கு நேற்று ‘டாட்டா' சொல்லி இருந்தனர். புயலால் சென்னை மெரினா, பட்டினப்பாக்கத்தில் கடல் அலை சற்று சீற்றத்துடன் காணப்பட்டது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்றும் (புதன்கிழமை) வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Next Story