திருப்பத்தூர்: குடும்ப தகராறில் கணவன்-மனைவி தற்கொலை - போலீசார் விசாரணை...!


திருப்பத்தூர்: குடும்ப தகராறில் கணவன்-மனைவி தற்கொலை - போலீசார் விசாரணை...!
x
தினத்தந்தி 12 May 2022 8:53 AM GMT (Updated: 12 May 2022 9:25 AM GMT)

திருப்பத்தூர் அருகே கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் பெரிய குனிச்சி குறவர் காலனி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயராமன். இவரது மகன் சுதாகர்  (வயது31). இவர் போச்சம்பள்ளி பகுதியில் செயல்பட்டுவரும் தொழில்பேட்டையில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த வருடம் தாய் மாமன் கிருஷ்ணன் மகள் ஆர்த்தி (20) என்பவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்று குறவர் காலனியில் வசித்து வந்தனர்.

மனைவி ஆர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது குடும்ப சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு குடும்ப சண்டை முற்றி போகவே சுதாகர் பஞ்சனம்பட்டியில் உள்ள அவரது மாமியாருக்கு தொடர்புகொண்டு குடும்ப சண்டை குறித்து பேசியுள்ளார்.

பின்னர் இருவரும் தூங்க சென்றனர். விடியற்காலை வழக்கம்போல் எழுந்து பார்க்கும்பொழுது அவரது மனைவி ஆர்த்தி இல்லாதது கண்டு அதிர்ந்து போய் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி தேட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் அருகே உள்ள  விவசாய கிணற்றில் பிணமாக கிடந்த  ஆர்த்தியின் உடலை கைப்பற்றிய போலீசார், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கணவன் சுதாகர் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்த போலீசார் சுதாகர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story