பாகப்பிரிவினை தகராறு: துப்பாக்கியால் தம்பியை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்

நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரிய தகராறில் தனது தம்பியை முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் ஜெகதீஷன் (வயது 42), முன்னாள் ராணுவ வீரர். ராணுவத்தில் இருந்து வெளியே வந்து 3 வருடங்களாகிறது. இவர் லைசென்சுடன் கூடிய கை துப்பாக்கி வைத்திருந்தார். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
தேசிங்கின் 2-வது மகன் கோதண்டராமன் (31). திருமணம் ஆகாதவர். இவர்களுக்கு சொந்தமாக கரிப்பூர் கிராமத்தில் 7 ஏக்கர் நிலமும், அந்த நிலத்திலேயே வீடும் உள்ளது. அண்ணன், தம்பியான இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோதண்டராமனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்த நிலையில் நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரி அவர் அண்ணனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது அண்ணன்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே ஜெகதீஷன் கைத்துப்பாக்கியால் கோதண்டராமனை சுட்டுள்ளார். இதில் குண்டுபாய்ந்து கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஷனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story