மர்ம விலங்கு கடித்து 21 ஆடுகள் சாவு


மர்ம விலங்கு கடித்து 21 ஆடுகள் சாவு
x

திருப்பத்தூர் அருகே கொட்டகைக்குள் புகுந்து மர்ம விலங்கு கடித்து குதறியதில் 21 ஆடுகள் இறந்தன.

திருப்பத்தூர்

21 ஆடுகள் சாவு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சிம்மனப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் 21 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது ஆடுகளை வழக்கம்போல கொட்டகையில் அடைத்து வைத்திருந்தார்.

நேற்று காலையில் ஆட்டு கொட்டகைக்கு சென்று பார்த்தார். அப்போது 21 ஆடுகளும் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தன. இதைபார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது மர்ம விலங்கு ஆடுகளை கடித்து குதறியிருப்பது தெரிய வந்தது.

உடனடியாக அவர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் ஆடுகளை கடித்துக் குதறிய மர்ம விலங்கு குறித்து விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

செந்நாய் கடித்ததா?

சிங்காரப்பேட்டை காப்பு காட்டில் உள்ள செந்நாய்கள் அல்லது வெறி நாய்கள் கூட்டமாக வந்து இதுபோன்று ஆடுகளை கடித்து குதறி சென்று விடுகிறது. ஆடுகளை கடித்துக் குதறிய விலங்கு பற்றி ஆய்வு செய்து, ஆடுகள் இறந்ததை படம் பிடித்து டேராடூனில் உள்ள வனவிலங்கு ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பியுள்ளோம்.

வனவிலங்குகள் உள்ள காட்டுப் பகுதிக்கும், ஆடுகள் இறந்த பகுதிக்கும் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ளது. செந்நாய்கள் அவ்வளவு தூரம் வந்தாலும் முழு ஆட்டையும் கடித்து எலும்புகளை மட்டும் விட்டு செல்லும். எனவே இது வெறி நாய்களின் தாக்குதலாக இருக்கலாம் என கருதப்படுகிறது என தெரிவித்தனர்.

மர்ம விலங்கு கடித்து குதறியதில் 21 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story