டெல்டா மாவட்டங்களில் 2.17 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு: அமைச்சர் சக்கரபாணி பேட்டி


டெல்டா மாவட்டங்களில் 2.17 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு: அமைச்சர் சக்கரபாணி பேட்டி
x

பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் 2.17 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

தஞ்சாவூர்,

காவிரிடெல்டா பகுதியை சேர்ந்த தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த மாவட்டங்களில் 10.5 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை மழை பெய்தது.

கணக்கெடுப்பு

பருவம் தவறி பெய்த இந்த திடீர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்திருந்த நெல்மணிகளும் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டன. நெற்பயிர்கள் மட்டுமின்றி உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட தானிய பயிர்களும் பாதிக்கப்பட்டன.

மழையால் எவ்வளவு ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கடந்த 2 நாட்களாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

அமைச்சர் ஆய்வு

இந்தநிலையில் பயிர் சேத விவரங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு, வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்வார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே புத்தூரில் பலத்த மழையால் சாய்ந்து கிடந்த நெற்பயிர்களை பார்வையிட்டார்.

பேட்டி

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன . இன்னும் அதிகாரிகள் ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர். இது இறுதி பாதிப்பு அளவு இல்லை. பாதிப்பு அளவு கூடுதலாக வரவும் வாய்ப்பு உள்ளது.

நாளை ( இன்று) சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

நேரடி கொள்முதல் நிலையங்களில் தற்போது 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் 22 சதவீதம் வரை தளர்வு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கான முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டிருக்கிறார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.


Next Story