ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை


ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை
x

கரூரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

25 பவுன் நகைகள் கொள்ளை

கரூர் எல்.வி.பி. நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 64). இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவார். இவரது உறவினர் ஒருவர் வெளியூரில் இறந்து விட்டார். இதனால் பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 21-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு புறப்பட்டு சென்றார். பின்னர் துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியூரில் இருந்து கடந்த 23-ந்தேதி பிரபாகரன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டினுள் பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் அலமாரியில் அவர் வைத்திருந்த 25 பவுன் தங்கநகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து பிரபாகரன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப்பதிந்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story