காளைகள் முட்டியதில் 26 பேர் காயம்


காளைகள் முட்டியதில் 26 பேர் காயம்
x

ஆலத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர். பரிசுகளை வீரர்கள் அள்ளிச்சென்றனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்த ஆலத்தூரில் நீலியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி நீலியம்மன் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

737 காளைகள்

இதில் 211 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப் போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை முட்டி தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

26 பேர் காயம்

காளைகள் முட்டி தள்ளியதில் பணம்பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 25), திருவப்பூரை சேர்ந்த முருகானந்தம் (32), சீத்தப்பட்டியை சேர்ந்த செல்லையா (48), நிலையப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி, ஆலத்தூரை சேர்ந்த முருகேசன் (55), மதுரையை சேர்ந்த பாலமுருகன் (25) உள்பட மொத்தம் 26 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த மாரியப்பன், சிங்கமுத்து உள்பட 7 பேர் மேல் சிகிச்சைக்காக இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசு பொருட்கள்

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரம், குத்துவிளக்கு, செல்போன் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், அன்னவாசல், இலுப்பூர் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஆலத்தூர் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்திரி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story