கார்த்திகை தீபம், பவுர்ணமி கிரிவலத்தையொட்டி: திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பஸ்கள்


கார்த்திகை தீபம், பவுர்ணமி கிரிவலத்தையொட்டி: திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பஸ்கள்
x

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 5-ந்தேதி முதல் 7-ந்தேதி (இன்று) வரை 2 ஆயிரத்து 700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னை,

திருவண்ணாமலை கோவிலில் நேற்று கார்த்திகை மகா தீபத்திருவிழா மற்றும் இன்று பவுர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.

இதையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் திருவண்ணாமலைக்கு வந்து செல்வதால், அவர்களின் பஸ் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்திடும் வகையில், சென்னை-தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை மற்றும் நெல்லை அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக 2 ஆயிரத்து 700 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.

சென்னையில், கோயம்பேடு மற்றும் தாம்பரம் பஸ் நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

பஸ் நிலையங்கள்

மேலும் திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, பயணிகள் அடர்வு குறையும் வரை, தேவைக்கேற்ப சிறப்பு பஸ்களை இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு பஸ்கள் இயக்கத்தினை மேற்பார்வை செய்திட, உரிய அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் மேற்பார்வையின்படி, சம்பந்தப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். மேலும், சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் இன்றியும், பொதுமக்கள் சிரமமின்றியும் பயணம் செய்திட ஏதுவாக, அரசு பஸ்களை இயக்கிட ஆவன செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இச்சேவையினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story