290 நீர்நிலைகளில் வண்டல் மண் இலவசமாக எடுக்க விண்ணப்பிக்கலாம்


290 நீர்நிலைகளில் வண்டல் மண் இலவசமாக எடுக்க விண்ணப்பிக்கலாம்
x

290 நீர்நிலைகளில் வண்டல் மண் இலவசமாக எடுக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 268 நீர்நிலைகளுக்கான ஏரி, குளம், குட்டை மற்றும் ஊரணிகளின் பட்டியல்கள் மற்றும் பொதுப்பணித்துறைக்கான 22 ஏரிகளுக்கான பட்டியல்கள் ஆகியவற்றில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கக் கூடிய அளவில் வண்டல் மண், களிமண், கிராவல் மண் எடுப்பது குறித்து மாவட்ட அரசிதழ் எண்ணின்படி வெளியிடப்பட்டுள்ளது. அரசு உத்தரவு மற்றும் கனிம விதிகளின்படி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சொந்த உபயோகத்திற்காக மட்டும் வண்டல் மண், களிமண், கிராவல் மண் போன்ற கனிமங்களை நஞ்சை நிலம் என்றால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகளும், புஞ்சை நிலம் என்றால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகளும், சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகள் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் பணிக்கு 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகள் என்ற அளவில் இலவசமாக எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண், களிமண், கிராவல் மண் எடுத்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மண் பரிசோதனை கூடம், கல்வி நிறுவன ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட மண் பரிசோதனை அறிக்கையுடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம். வீட்டு உபயோக மற்றும் வேளாண் நோக்கத்திற்கு நீங்கலாக இதர தேவைகளுக்கு அந்த மண்ணை பயன்படுத்த அனுமதி இல்லை. மேற்படி விதிகளின் கீழ் மண் எடுக்க அனுமதி பெற மாவட்ட கலெக்டர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story