தமிழ்நாடு ஆயர்பேரவை 2-வது நாள் கூட்டம்:ஆன்மிக, சமூக, கல்வி மேம்பாடு குறித்து ஆய்வு


தினத்தந்தி 19 Jan 2023 6:45 PM GMT (Updated: 19 Jan 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் நடந்த தமிழ்நாடு ஆயர்பேரவை 2-வது நாள் கூட்டத்தில் ஆன்மிக, சமூக, கல்வி மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த தமிழ்நாடு ஆயர் பேரவையின் கூட்டத்தில் ஆன்மிகம், சமூகம், கல்வி மேம்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆயர் பேரவை கூட்டம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்களின் பேராயர்கள், ஆயர்கள் அடங்கிய தமிழ்நாடு ஆயர் பேரவை சார்பில் ஆண்டு தோறும் இரண்டு முறை கூடி பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முதலாவது கூட்டம் தூத்துக்குடி பிஷப் இல்லத்தில் வைத்து 2 நாட்கள் நடந்தது. தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான கூட்டம் தூத்துக்குடியில் வைத்து நடத்தப்பட்டு உள்ளது.

இந்த கூட்டம் நேற்று முன்தினம் காலையில் தொடங்கியது. கூட்டத்துக்கு தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவரான சென்னை மயிலாப்பூர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 22 பிஷப்புகள், ஒரு பேரவை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆன்மிகம்

நேற்று 2-வது நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க மறைமாவட்டங்களுக்கான ஆன்மிக, சமூக, கல்வி மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அவைகளை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து ஆராயப்பட்டன. முடிவில் மறைமாவட்ட நிதி நிர்வாக பொறுப்பாளர் எஸ்.எம்.சகாயம் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை ரோலிங்டன், வட்டார அதிபர் பென்சன், நற்செய்தி நடுவம் இயக்குநர் ஸ்டார்வின், நூற்றாண்டு விழா பொறுப்பாளர் ஜேம்ஸ் விக்டர் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story