மிதிலி புயல் உருவானதை குறிக்கும் வகையில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட அறிவுறுத்தல்


மிதிலி புயல் உருவானதை குறிக்கும் வகையில் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட அறிவுறுத்தல்
x

மிதிலி புயல் வங்கதேசத்தின் மோங்லா - கொபுபரா இடையே நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மிதிலி' புயலாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த புயல், ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

மேலும் இந்த புயலானது வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வங்கதேசத்தின் மோங்கா, கொபுரா கடற்கரை இடையே கரையை கடக்கும் என்றும், கரையை கடக்கும்போது மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வடமேற்கு வங்கக்கடலில் மிதிலி புயல் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. புயல் காரணமாக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story