2-ம் கட்டமாக ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் வட்டாரங்களில் சிறப்பு முகாம்கள்


2-ம் கட்டமாக ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் வட்டாரங்களில் சிறப்பு முகாம்கள்
x

கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய 2-ம் கட்டமாக ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் வட்டாரங்களில் சிறப்பு முகாம்களுக்கான டோக்கன் நாளை முதல் வினியோகிக்கப்படுகிறது.

அரியலூர்

5-ந் தேதி முதல் சிறப்பு முகாம்கள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெற தகுதியான குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் அரியலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக ஜெயங்கொண்டம் வட்டத்தில் 162 ரேஷன் கடை பகுதிகளிலும், ஆண்டிமடம் வட்டத்தில் 67 ரேஷன் கடை பகுதிகளிலும் வருகிற 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

விண்ணப்ப பதிவு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் வட்டாரங்களில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும்.

சந்தேகங்களுக்கு...

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிற்கு, டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் குறித்த நேரத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், மின்கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்திட வேண்டும்.

2-ம் கட்ட முகாம்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை 04329-228709 என்ற தொலைபேசி எண்ணிலும், 9384056231 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், வட்டாட்சியர் அலுவலகங்களின் கட்டுப்பாட்டு அறைகளை ஜெயங்கொண்டம் 04331-250220, ஆண்டிமடம் 04331-299800 என்ற தொலைபேசி எண்களிலும் அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story