குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: குளிக்க சென்றபோது பரிதாபம்


குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: குளிக்க சென்றபோது பரிதாபம்
x

வேலூர் அருகே குளிக்க சென்ற அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி பலியாகினர்.

வேலூர்,

வேலூர் அருகே உள்ள அப்துல்லாபுரம் ரிக்‌ஷா காலனியை சேர்ந்தவர் ஜீவா. இவரது மகன்கள் ஆகாஷ் (வயது 12). ஹரிஷ் (11). இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் முறையே 6, 7-ம் வகுப்பு படித்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்தவன் இமானுவேல் (13). காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

சிறுவர்களின் தந்தைகள் இருவரும் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளர்கள். இந்தநிலையில் சிறுவர்கள் 3 பேரும் அங்குள்ள சாய்பாபா கோவில் பின்புறம் அமைந்துள்ள ஏரி பகுதியில் உள்ள குட்டைக்கு நேற்று மாலை குளிக்க சென்றனர்.

குட்டையில் மூழ்கி 3 பேர் பலி

அப்போது அவர்கள் 3 பேரும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினர். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீரில் இறங்கி அவர்களை தேடினர்.

அப்போது ஆகாஷ், ஹரிஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் இமானுவேலும் மீட்கப்பட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். 3 பேரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்து அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


Next Story