ரூ.3 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாடு


ரூ.3 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாடு
x
தினத்தந்தி 26 Sep 2023 7:45 PM GMT (Updated: 26 Sep 2023 7:46 PM GMT)

டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் இணைக்கப்பட்டதன் பயனாக ரூ.3 லட்சம் கோடி சேமிக்கப்பட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப் படுவதாக மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

கோயம்புத்தூர்
கோவை


டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் இணைக்கப்பட்டதன் பயனாக ரூ.3 லட்சம் கோடி சேமிக்கப்பட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப் படுவதாக மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.


156 பேருக்கு பணிநியமன ஆணை


நாடு முழுவதும் 46 இடங்களில் மத்திய அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கும் 'ரோஜ்கர் மேளா' நேற்று நடைபெற்றது. இது போல் கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.


அவர், தபால் துறை, வங்கி மற்றும் இந்திய உணவுக் கழகம் உள்ளிட்ட துறைகளில் புதிதாக பணியமர்த்தப் பட்ட 156 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-


10 லட்சம் பேருக்கு வேலை


பிரதமரின் ரோஜ்கர் மேளா மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை தருவதாக அறிவித்தது. அதன்படி 8-வது ரோஜ்கர் மேளாவில் இதுவரை 8.5 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கியுள்ளது.


டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் இணைக்கப்பட்டு அதன் பயனாக ரூ.3 லட்சம் கோடி சேமிக்கப்பட்டு நாட்டின் உள்கட்ட மைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. அது போல் வந்தே பாரத் ரெயில் சேவை, சந்தி ராயன் போன்ற விஷயங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.


2047-ம் ஆண்டு பாரத தேசம் பெரிய வளர்ச்சியில் இருக்கும். புதிய இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. 2014-ம் ஆண்டு 500 எண்ணிக்கையில் இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தற்போது 1 லட்சம் நிறுவனங்களாக உயர்ந்து உள்ளது.


அதில் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தலைமை செயல் அதிகாரி களாக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.


மீனவர்கள் நலன்


தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையால் பிடிக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத் துறை மந்திரி சார்பில் மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டு வருகிறோம்.மீனவர்கள் நலனில் அதிக அக்கறையுடன் பிரதமர் செயல்பட்டு வருகிறார். மீனவர்களுக்காக புதிய அமைச்சகத்தை பிரதமர் மோடி உருவாகியுள்ளார்.


பி.எம்.எஸ் திட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் படகில் செல்லும் மீனவர்க ளுக்கு ரூ.17 ஆயிரம் கோடிக்கு தகவல் தொடர்பு கருவிகள் கொடுக்கப்பட்டு உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story