வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை
x

நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

நாமக்கல்

லாரி டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது39). லாரி டிரைவர். இவர் நாமக்கல் வள்ளிபுரம் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள லாரி பட்டறை ஒன்றில் டிப்பர் லாரியை பழுது நீக்கும் பணிக்காக விட்டு இருந்தார். இரவு 12 மணி வரை பழுதுபார்க்கும் பணியை கவனித்த பட்டறையின் உரிமையாளர் துரைராஜ் (37) மற்றும் கணேசமூர்த்தி ஆகிய இருவரும் அங்கேயே படுத்து தூங்கினர். காலையில் எழுந்து பார்த்தபோது கணேசமூர்த்தி லாரியில் உள்ள கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தற்கொலை

திருச்செங்கோடு அருகே கோவில்பாளையம் அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. தொழிலாளி. இவரது மகள் சுகந்தி (19). இவர் நாமக்கல் அரசு கல்லூரியில் பி.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக சுகந்தி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் சுகந்தி மன வேதனையில் இருந்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாதபோது சுகந்தி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் சுகந்தி உடலை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாா் வழக்குப்பதிவு செய்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

மல்லசமுத்திரம் அருகே காளிப்பட்டி காரக்குட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் ( 34). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய கடந்த சில மாதங்களாக பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை திருமணம் நடக்கவில்லை. இதனால் கேசவன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் கேசவன் வீட்டில் யாரும் இல்லாத போது விட்டத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story