கார், மொபட் மூலம் கஞ்சா விற்ற 3 பேர் கைது


கார், மொபட் மூலம் கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

திருவண்ணாமலையில் கார், மொபட் மூலம் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை நகர பகுதியில் கார் மற்றும் மொபட்டில் வைத்து கள்ளத்தனமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையிலான தனிப்படையினர் திருவண்ணாமலை நகரில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நகரில் சுற்றி வந்த கார் மற்றும் மொபட்டை தனிப்படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அப்போது காரில் கஞ்சா வைத்து விற்பனை செய்த திருவண்ணாமலை நகரை சேர்ந்த விக்னேஷ், தாமோதரன் ஆகியோரை பிடித்த அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மொபட்டில் வந்த திருவண்ணாமலை அக்னி தீர்த்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை பிடித்து அவரிடம் 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், தாமோதரன், வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்து கார் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.


Next Story