வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது


வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது
x

திருவண்ணாமலையில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 போ் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 போ் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

2 பேர் கைது

திருவண்ணாமலை வனசரகத்திற்கு உட்பட்ட கன்னமடை காப்புக்காடு மற்றும் அழகானந்தல் கிராமத்தில் திப்புக்காடு ஆகிய பகுதிகளில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக திருவண்ணாமலை சரக வன அலுவலர் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலையை அடுத்த வள்ளிமலை கிராமத்தில் உள்ள கன்னமடை காப்புக்காடு பகுதியில் சு.ஆண்டாபட்டு கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் (வயது 21), கொளக்குடி கிராமத்தை சேர்ந்த குமார் (52) ஆகியோர் வனவிலங்குகளை வேட்டையாட முயன்று உள்ளனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் திருவண்ணாமலையை அடுத்த அழகானந்தல் கிராமத்தில் அமைந்துள்ள திப்புக்காட்டில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொளக்குடியை சேர்ந்த பொன்னன் (53), அழகானந்தலை சேர்ந்த ரவி, அரடாப்பட்டு பகுதியை சேர்ந்த பச்சமுத்து ஆகியோர் வனவிலங்குகளை வேட்டையாட முயன்று உள்ளனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் பொன்னனை மட்டும் பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பொன்னனை கைது செய்தனர்.

மேலும் கைதான 3 பேரிடம் இருந்து உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கிகள், ஒரு மோட்டார் சைக்கிள், முயல் வலை, பால்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story