3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

வீரபாண்டி:
திருப்பூரில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 3 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
செல்போன் பறிப்பு
திருப்பூர் நொச்சிப்பாளையம் பிரிவில் இருந்து விக்னேஸ்வரா நகர் செல்லும் வழியில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி சுப்பிரமணி என்பவரை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றவர்கள் தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் என்.கள்ளிப்பட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது 24), அனுப்பர்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த பிரவீன் (24), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ராமர் (25) ஆகியோரை வீரபாண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
அருண்குமார் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 7 வழக்குகளும், பிரவீன் மீது 3 திருட்டு, வழிப்பறி வழக்குகளும், ராமர் மீது 8 திருட்டு, வழிப்பறி வழக்குகளும் உள்ளன. 3 பேரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டார்.
கோவை மத்திய சிறையில் உள்ள அருண்குமார், பிரவீன், ராமர் ஆகிய 3 பேரிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை போலீசார் நேற்று வழங்கினார்கள். திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 40 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.