பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு, போக்சோ சட்டம் குறித்து 3 மாவட்ட போலீசாருக்கு சிறப்பு பயிற்சி


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு, போக்சோ சட்டம் குறித்து    3 மாவட்ட போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
x
தினத்தந்தி 31 Aug 2023 6:45 PM GMT (Updated: 31 Aug 2023 6:46 PM GMT)

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு, போக்சோ சட்டம் குறித்து 3 மாவட்ட போலீசாருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

விழுப்புரம்

போலீசாருக்கு சிறப்பு பயிற்சி

தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள், அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் ஆகியோரை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தர போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும்படி, போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் அறிவுரையின்படி விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

புலனாய்வு செய்யும் முறைகள்

விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் பணியிடை பயிற்சி மையத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. இதில் சிறப்பு பயிற்றுனராக விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றம் மற்றும் போக்சோ நீதிமன்றத்தின் முன்னாள் அரசு வக்கீல் ராதிகா செந்தில் கலந்துகொண்டு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை பெற்று உரிய முறையில் புலனாய்வு செய்யும் முறைகள், அக்குற்றங்கள் மீது வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள், குற்றவாளிகள் வழக்கில் இருந்து விடுபடாமல் அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தருவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து பயிற்சியளித்தார்.

மேலும் இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும், வரதட்சணை கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள், விசாரணை முறைகள் குறித்தும் பயிற்சியளித்தார். இப்பயிற்சி முகாமில் 3 மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாட்டை விழுப்புரம் பணியிடை பயிற்சி மைய துணை போலீஸ் சூப்பிரண்டு திருப்பதி, இன்ஸ்பெக்டர் பிரபாவதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


Next Story