அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள் கலெக்டா் தகவல்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்காக தகுதியான ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து வருகிற 31-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப் படை அறிவித்துள்ளது. இதற்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் agnipathvayu.cdac.in மூலம் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
அக்னி வீரர்களுக்கான இணையவழி தேர்வு 20.5.2023 அன்று நடக்கிறது.12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுடையவர்கள், மேலும் டிசம்பர் 26, 2002 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் ஜூன் 26, 2006 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உடல் தகுதி
உடல் தகுதியை பொறுத்தவரை, ஆண்கள் 152.5 சென்டி மீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது 3 முறைகளை கொண்டது. எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது. இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம். ஆக்னி வீர திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். ஆகவே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் கடலூர் மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.






