காளைகள் முட்டியதில் 32 பேர் காயம்


காளைகள் முட்டியதில் 32 பேர் காயம்
x

காளைகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்தனர்.

திருச்சி

ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பெரிய அணைக்கரைப்பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ேநற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். சிறப்பு திருப்பலி நிறைவேற்றிய பின் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்க முயன்றனர். காளைகள் வீரர்களை முட்டித்தூக்கி வீசி பந்தாடின. இருப்பினும் காளைகளை வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர்.

32 பேர் காயம்

இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள் என பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் 707 காளைகள் மற்றும் 174 வீரர்கள் பங்கேற்றனர்.

காளைகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 9 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராமநாதன் (மணப்பாறை), ஜாஸ்மின் (முசிறி) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காளை சாவு

ஜல்லிக்கட்டு நடைபெற்றபோது 2 காளைகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட காளை, அதே இடத்தில் துடிதுடித்து செத்தது. இதை பார்த்த பலரும் கதறி அழுதது அந்த பகுதியையே சோகமயமாக்கியது.


Next Story