320 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


320 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Oct 2023 7:45 PM GMT (Updated: 26 Oct 2023 7:46 PM GMT)

திண்டுக்கல்லில் கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட 320 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதன் பேரில் மாநகர்நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேல், கேசவன், செல்வராணி மற்றும் அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள மொத்த விற்பனை கடைகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட 320 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், கப்புகள், தட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 கடைகளின் உரிமையாளர்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


Next Story